ஆட்டத்தின் போக்கை மாற்றிய 4 சிக்ஸர்கள்... ரிங்கு சிங்குக்கு இர்பான் பதான் பாராட்டு!
லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிங்கு சிங்கை இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் பாராட்டியுள்ளார்.
லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிங்கு சிங்கை இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் பாராட்டியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் லக்னௌவில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் சூப்பர் ஓவரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, லக்னௌவை வீழ்த்தியது.
இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரன்கள் குவிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்து திணறியது. இருப்பினும், ரிங்கு சிங்கின் அபார ஆட்டம் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு ஓரளவுக்கு நல்ல ஸ்கோரை கொடுத்தது. அதிரடியாக விளையாடிய அவர் 51 பந்துகளில் 83 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். திக்வேஷ் சிங் ரதி வீசிய 20-வது ஓவரில், ரிங்கு சிங் தொடர்ச்சியாக நான்கு சிக்ஸர்கள் விளாசி அசத்தினார்.
Advertisement
இந்த நிலையில், ஆட்டத்தின் கடைசி ஓவரில் போட்டி குறித்த விழிப்புணர்வுடன் ரிங்கு சிங் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: முதல் இன்னிங்ஸின் கடைசி ஓவரில் ரிங்கு சிங்கின் போட்டி குறித்த விழிப்புணர்வு மிகவும் அற்புதமாக இருந்தது. பந்துவீச்சாளர்கள் என்ன மாதிரியான திட்டத்துடன் வருவார்கள், எந்த வகையில் ரன்கள் குவிக்கலாம் என விழிப்புணர்வுடன் இருந்தார். ஆடுகளத்தின் இரண்டு திசைகளிலும் ரன்கள் குவிக்கும் வாய்ப்பை அவர் உருவாக்கினார்.
கடைசி ஓவரில் அவர் தொடர்ச்சியாக விளாசிய அந்த 4 சிக்ஸர்கள் ஆட்டத்தின் போக்கை மாற்றியது. அந்த ஓவரில் கிடைத்த 26 ரன்கள் இல்லையென்றால், கொல்கத்தா நைட் ரைடர்ஸால் இந்தப் போட்டியில் வென்றிருக்க முடியாது. அதிரடியாக விளையாடியது மட்டுமின்றி, ரன்கள் குவிக்க வேண்டும் என்ற பொறுப்பையும் ரிங்கு சிங் எடுத்துக் கொண்டார். அழுத்தமான சூழலில் அவர் மிகவும் நன்றாக செயல்பட்டார் என்றார்.