ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த விவகாரம்! ரியான் பராக்கிற்கு அபராதம்!
ரியான் பராக்கிற்கு அபராதம் விதிக்கப்பட்டிருப்பது பற்றி...
ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ரியான் பராக் ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த விடியோ வெளியான நிலையில் அவருக்கு ஐபிஎல் நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 40 ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை இரவு ராஜஸ்தான் அணி வீழ்த்தியது.
இந்த போட்டியில் இரண்டாவதாக ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்த நிலையில், 16 ஆவது ஓவரில் ஓய்வறையில் இருந்த ரியான் பராக் சக வீரர்களான துருவ் ஜுரேல் மற்றும் ஜெய்ஸ்வாலுடன் பேசியபடி, இ-சிகரெட் பிடிக்கும் காட்சி நேரலையில் வெளியானது.
Advertisement
Advertisement
இந்தியாவில் 'இ-சிகரெட்' பயன்படுத்துவது 'மின்னணு சிகரெட் தடைச் சட்டம் 2019'படி சட்டவிரோதமானது. நாட்டில் இ-சிகரெட் உற்பத்தி, விற்பனை, இறக்குமதி மற்றும் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஐபிஎல் விதிகளின்படி, ஓய்வறை, திடல் உள்ளிட்ட பகுதிகளில் புகைப்படிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ரியான் பராக்கிற்கு போட்டி சம்பளத்தில் இருந்து 25 சதவிகிதத்தை அபராதம் விதிப்பதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும், அவருக்கு தகுதிக் குறைப்பு புள்ளி (Demerit point) ஒன்றையும் ஐபிஎல் நிர்வாகம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.