தேசியக் கொடியை அவமதிப்பதா? ஹர்திக் பாண்டியா மீது வழக்குப்பதிவு!
உலகக் கோப்பை வெற்றிக் கொண்டாட்டத்தில் தேசியக் கொடியை அவமதித்ததாக ஹர்திக் பாண்டியா மீது புகாரளிக்கப்பட்டது பற்றி...
டி20 உலகக் கோப்பை வெற்றி கொண்டாட்டத்தின்போது தேசியக் கொடியை அவமதித்ததாக இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா மீது புகாரளிக்கப்பட்டுள்ளது.
இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி கடந்த மார்ச் 9 அன்று டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்தைத் தோற்கடித்து தொடர்ந்து இரண்டாவது முறையாகக் கோப்பையை வென்றது.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற வெற்றிக் கொண்டாட்டத்தில் இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா தேசியக் கொடியை அவமதித்ததாக புனேவைச் சேர்ந்த வழக்குரைஞர் வாஜித் கான் பித்கர் பெங்களூரின் சிவாஜிநகர் காவல்துறையில் புகாரளித்துள்ளார்.
இந்தப் புகாரில், ”இந்திய அணியின் வெற்றிக் கொண்டாட்ட விடியோக்கள் இணையத்தில் வைரலாகின. அதில் ஒரு விடியோவில், தேசியக் கொடியை தன்மேல் சுற்றியிருந்த பாண்டியா மைதானத்தில் நடனமாடி ஓடிக்கொண்டிருந்தார். அப்போது, தேசியக்கொடி சுற்றப்பட்ட நிலையில் பாண்டியா அவரின் காதலி மஹிகா ஷர்மாவுடன் மேடையின் ஓரம் படுத்திருந்தார். இது 1971 தேசியக்கொடி சட்டத்தின் பிரிவு 2-ன் படி தேசியக் கொடியை அவமதிக்கும் செயல்” என அவர் குறிப்பிட்டார்.
மேலும், ”இதுதொடர்பாக நான் புகாரளித்தபோது அது இங்கு நடக்கவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்தனர். ஆனால், தேசியக்கொடி ஒட்டுமொத்த நாட்டிற்கான சின்னம். எனவே, அங்கு வேண்டுமானாலும் புகாரளிக்கலாம் என்று நான் தெரிவித்தேன். அவர்கள் என் புகாரை ஏற்றுக்கொண்டனர். அடுத்து என்ன நடக்கிறது என்று பார்ப்போம்” எனக் கூறினார்.