ஐபிஎல் 2026: ஹர்ஷித் ராணா விலகல்?
ஐபிஎல் தொடரில் இருந்து ஹர்ஷித் ராணா விலகுவதாக தகவல்...
ஐபிஎல் 2026 தொடரில் இருந்து ஹர்ஷித் ராணா விலக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டி20 உலகக் கோப்பைத் தொடரின் பயிற்சி ஆட்டத்தின்போது, இளம் வேகப் பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணாவுக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது. இதனால், அவர் உலகக் கோப்பைத் தொடரிலிருந்து விலகினார்.
இந்த நிலையில், மார்ச் 28 ஆம் தேதி தொடங்கவுள்ள ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளராக ராணா இருக்கிறார்.
ஆனால், காயம் இன்னும் சரியாகாத காரணத்தால் ஐபிஎல் 2026 தொடரில் இருந்து அவர் விலக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி சாம்பியன் பட்டம் பெற ராணா முக்கிய பங்காற்றினார். அந்த தொடரில் 19 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் இந்திய அணியில் இடம்பிடித்தார்.
தொடர்ச்சியாக 2025 ஆம் ஆண்டும் ராணாவை கொல்கத்தா அணி ரூ. 4 கோடிக்கு தக்கவைத்துக் கொண்டது.
தற்போது ராணா விலகும் சூழல் ஏற்பட்டிருப்பதால், கொல்கத்தா அணியின் நிர்வாகம் மாற்று வீரரை எடுக்க தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றது.
மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்காக விளையாடிய ஆகாஷ் மத்வால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய சிமர்ஜீத் சிங், தில்லி பிரீமியர் லீக்கில் ஜொலித்த மணி கிரெவால் உள்ளிட்டவர்களை அணியில் சேர்க்க கொல்கத்தா நிர்வாகம் ஆலோசித்து வருகின்றது.
இதனிடையே, ஏலத்தில் ரூ. 18 கோடிக்கு கொல்கத்தா நிர்வாகத்தால் வாங்கப்பட்ட இலங்கை வீரர் பதிரனாவும் காயம் காரணமாக உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகினார்.
காயத்தில் இருந்து குணமடைந்து பதிரனாவும் கொல்கத்தா அணிக்கு திரும்புவாரா என்பது சந்தேகமே.