பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்?
பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகியதாக வெளியாகும் தகவல் பற்றி...
பாரதிய ஜனதா கட்சியில் இருந்து அக்கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே. அண்ணாமலை விலகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலை, 2019 ஆம் ஆண்டு விருப்ப ஓய்வுபெற்று பாஜகவில் இணைந்தார். ஜூலை 2021-ல் மாநில பாஜக தலைவராக அண்ணாமலை பதவியேற்றார்.
திமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை குறித்து அன்றாட செய்தியாளர்கள் சந்திப்பு, ‘என் மண் என் மக்கள்’ நடைபயணம் என தமிழக மக்களிடையே பாஜக மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை வரவேற்பை பெற்றிருந்தார்.
Advertisement
Advertisement
ஆனால், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக, அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்த நிலையில், 2025-ல் மாநிலத் தலைவர் பதவியிருந்து அண்ணாமலை மாற்றப்பட்டார். பாஜக மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் அண்ணாமலை கேட்ட தொகுதி ஒதுக்கப்படாததால், அவர் தேர்தலில் போட்டியிடவில்லை. கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் மட்டும் ஈடுபட்டார்.
கட்சித் தலைவர்கள் மத்தியில் அண்ணாமலைக்கு கருத்து வேறுபாடு இருந்த நிலையில், மக்கள் சக்தி இயக்கம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை அவர் தொடங்கவுள்ளதாக கடந்த ஒரு வாரமாக தகவல்கள் வெளியாகி வந்தன.
இந்த நிலையில், தில்லிக்கு பயணம் மேற்கொண்டிருக்கும் அண்ணாமலை இன்று காலை பாஜக தேசியத் தலைவர் நிதின் நவீனை சந்தித்து, ராஜிநாமா கடிதத்தை வழங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தோற்றதற்கான காரணம், கட்சியின் தான் ஒதுக்கப்பட்டது உள்ளிட்டவை குறித்து அவர் அறிக்கையாக நிதின் நவீனிடம் சமர்ப்பித்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்த அண்ணாமலை, கட்சியில் இருந்து விலகுவது குறித்து விளக்கம் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வருகின்ற ஜூன் - 4, வியாழக்கிழமை அன்று அண்ணாமலை பிறந்த நாள் கொண்டாடும் நிலையில், அவரது அரசியல் கட்சி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அன்று வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Annamalai Resigns from BJP?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.