பாபர் அசாமுக்கு மீண்டும் கேப்டன் பொறுப்பு வழங்கப்படுமா?
பாகிஸ்தான் அணியின் கேப்டனாக பாபர் அசாம் மீண்டும் நியமிக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பாகிஸ்தான் அணியின் கேப்டனாக பாபர் அசாம் மீண்டும் நியமிக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கடந்த 2020 மற்றும் 2023 ஆம் ஆண்டு இடைவெளியில் அனைத்து வடிவிலான போட்டிகளிலும் பாகிஸ்தான் அணியை பாபர் அசாம் கேப்டனாக வழிநடத்தினார். கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பைத் தொடருக்குப் பிறகு, ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன் பொறுப்பிலிருந்து பாபர் அசாம் விலகினார்.
கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் அணியை பாபர் அசாம் கேப்டனாக வழிநடத்தினார். அந்த தொடருக்குப் பிறகு டி20 போட்டிகளுக்கான கேப்டன் பொறுப்பிலிருந்து அவர் நீக்கப்பட்டார்.
Advertisement
இந்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விரும்பினால் அணியின் நலனுக்காக மீண்டும் கேப்டனாக செயல்படுவேன் என பாபர் அசாம் கூறியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: பாகிஸ்தான் அணியின் கேப்டனாக செயல்படாதது தற்போது உள்ள பிரச்னை கிடையாது. பாகிஸ்தான் சூப்பர் லீக் இறுதிப்போட்டிக்கு கவனம் செலுத்தி வருகிறேன். ஆனால், எதிர்காலத்தில் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக செயல்படும் சூழல் உருவானால், பாகிஸ்தான் கிரிக்கெட்டின் நலனுக்காக அணியின் கேப்டனாக செயல்படுவேன் என்றார்.
பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் பெஷாவர் ஸல்மி அணியை பாபர் அசாம் கேப்டனாக வழிநடத்தி வருகிறார். அவரது தலைமையிலான பெஷாவர் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இறுதிப்போட்டியில் பாபர் அசாம் தலைமையிலான பெஷாவர் ஸல்மி அணி, மார்னஸ் லபுஷேன் தலைமையிலான ஹைதராபாத் கிங்ஸ்மென் அணியை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.