பெண் குழந்தைக்கு தந்தையானார் சூர்யகுமார் யாதவ்!
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பெண் குழந்தைக்கு தந்தையானதைப் பற்றி...
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பெண் குழந்தைக்கு தந்தையானதாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்திய டி20 அணியின் கேப்டனும், மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரருமான சூர்யகுமார் யாதவ் - தேவிஷா ஷெட்டி தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
35 வயதான சூர்யகுமார் 2011 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமானார். மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா அணிகளுக்காக விளையாடியுள்ள இவர், 2021 ஆம் ஆண்டு இந்திய அணியில் தனது 31 வயதில் அறிமுகமானார்.
Advertisement
2024 ஆம் ஆண்டு இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்ற போது பங்காற்றியிருந்த இவர் அதன்பின்னர், கேப்டன் பொறுப்பை வகித்து வருகிறார்.
கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் நடைபெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்றிருந்த நிலையில், மற்றொரு மகிழ்ச்சி சம்பவமாகவும், 2026 ஆம் ஆண்டு மறக்க முடியாத ஆண்டாக அமைந்திருக்கிறது.
சூர்யகுமார் மற்றும் தேவிஷா இருவரும் 2010-ஆம் ஆண்டு மும்பையில் கல்லூரி காலத்திலிருந்தே காதலித்து வந்த நிலையில் 2016 ஆம் ஆண்டில் இருவரும் திருமண பந்தத்தில் இணைந்தனர். கிட்டத்தட்ட பத்தாண்டுகள் கழித்து இருவருக்கும் பெண் குழந்தை பிறந்திருப்பது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
நடப்பு ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிராக மே 10 ஆம் தேதி நடைபெறவுள்ள போட்டிக்காக ராய்ப்பூருக்குச் சென்ற மும்பை அணியினர் குழுவில் சூர்யகுமார் யாதவ் இடம்பெறவில்லை. மேலும், லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான கடைசி போட்டியில் யாதவ் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாகவும் தலைமை வகித்திருந்தார்.
பெண் குழந்தைக்குத் தந்தையான சூர்யகுமார் யாதவுக்கு சக வீரர்கள், முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் என பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றன.