தடுமாறும் ராஜஸ்தான் ராயல்ஸ்; வெற்றியை தொடரும் முனைப்பில் குஜராத் டைட்டன்ஸ்!
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் இடையே நாளை நடைபெறவுள்ள முக்கியமான போட்டி குறித்து...
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் நாளை முக்கியமான போட்டியில் விளையாடவுள்ளன.
ஐபிஎல் தொடரில் ஜெய்பூரில் நாளை (மே 9) நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடுகின்றன.
இரண்டு அணிகளும் 10 போட்டிகளில் விளையாடி 6 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களில் உள்ளன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4-வது இடத்திலும், குஜராத் டைட்டன்ஸ் 5-வது இடத்திலும் உள்ளன. இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையில் நாளை நடைபெறவுள்ள போட்டிக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
Advertisement
ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி கடந்த மூன்று போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளது. ஆனால், ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் கடந்த 5 போட்டிகளில் 3 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. இதனால், ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி நடையை தொடரும் நம்பிக்கையில் உள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் வைபவ் சூர்யவன்ஷி, யஷஸ்வி ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடி வருகின்றனர். துருவ் ஜுரெலும் நன்றாக விளையாடுகிறார். இருப்பினும், பெரிய இன்னிங்ஸ் விளையாட வேண்டிய பொறுப்பு அவருக்கு இருக்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டாலும் மிடில் ஓவர்களில் ரன்களைக் கட்டுப்படுத்த தவறுகிறது.
குஜராத் டைட்டன்ஸ் அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு ரன்கள் குவிக்கிறார்கள். ஷுப்மன் கில், சாய் சுதர்சன் மற்றும் ஜோஸ் பட்லர் பேட்டிங்குக்கு பலம் சேர்க்கின்றனர். குஜராத் அணியின் டாப் ஆர்டர் ரன்கள் குவிக்கத் தவறும் பட்சத்தில், அந்த அணி சிக்கலை சந்தித்துள்ளதையும் பார்க்க முடிந்தது. அந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்டர்கள் நன்றாக விளையாடி ரன்கள் குவிக்க வேண்டும்.
பந்துவீச்சை பொருத்தவரையில், ககிசோ ரபாடா, முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா அணிக்கு பலம் சேர்க்கின்றனர்.