கார்த்திக் சர்மா, துபே அதிரடி... லக்னௌவுக்கு 188 ரன்கள் இலக்கு!
லக்னௌ அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 188 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளதைப் பற்றி....
லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 188 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரின் 59-வது போட்டி உத்தரப் பிரதேசத்தின் தலைநகர் லக்னௌவில் உள்ள எகானா கிரிக்கெட் திடலில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற லக்னௌ அணியின் கேப்டன் ரிஷப் பந்த் முதலில் பந்து வீசுவதாகத் தெரிவித்தார்.
Advertisement
அதன்படி, முதலில் பேட்டிங் ஆடிய சென்னை அணியில் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் 20 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து ஏமாற்றமளிக்க, கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 13 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.
கடைசிப் போட்டியில் ஆட்டநாயகனான உர்வில் பட்டேல் ஜொலிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 6 ரன்களில் விக்கெட்டைப் பறிகொடுத்தார்.
அடுத்து ஜோடி சேர்ந்த கார்த்திக் சர்மாவும் டெவால்ட் பிரேவிஸ் இருவரும் ரன்குவிப்பில் ஈடுபட்டனர்.
டெவால்டு பிரேவிஸ் 2 சிக்ஸர்களுடன் 25 ரன்கள் எடுத்து அவுட்டாக, நிதானமாகவும் அதே நேரத்தில் அதிரடியாகவும் விளையாடிய கார்த்திக் சர்மா அரைசதம் கடந்து அசத்தினார்.
42 பந்துகளில் 6 பௌண்டரிகள், 5 சிக்ஸர்களுடன் 71 ரன்கள் எடுத்து ஷெபாஸ் அகமதுவிடம் வீழ்ந்தார்.
அதிரடியாக விளையாட துபே 16 பந்துகளில் 3 பௌண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 32 ரன்கள் விளாசியும், பிரசாந்த் வீர் 13 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். கடைசி ஓவரில் 23 ரன்கள் கிடைத்தால் சென்னை அணி 180 ரன்களைக் கடந்தது.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சென்னை அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 187 ரன்கள் குவித்தது. லக்னௌ அணித் தரப்பில் ஆகாஷ் மகராஜ் சிங் 3 விக்கெட்டுகளும், முகமது ஷமி, ஷெபாஸ் அகமது இருவரும் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.