இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான தனது கடைசி லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஞ்சாப் மாநிலம், மொஹாலி நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில், டாஸ் வென்று முதலில் பந்து வீசத் தீர்மானித்தது பஞ்சாப். முதலில் விளையாடிய சிஎஸ்கே, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்தது. இந்த இலக்கை 18 ஓவர்களில் அடைந்தது பஞ்சாப் அணி.
இந்த ஆட்டத்தில் 14-வது ஓவரின்போது ஃபீல்டிங் செய்ய முயன்ற நிலையில் தடுமாறி கீழே விழுந்தார் ஜாதவ். இதில் அவருடைய தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக ஓய்வறைக்குச் சென்று சிகிச்சை மேற்கொண்டார்.
ஜாதவ் காயம் குறித்து சிஎஸ்கே பயிற்சியாளர் ஃபிளெமிங் கூறியதாவது:
நாளை (திங்கள்) ஜாதவின் காயத்துக்கு எக்ஸ்ரேவும் ஸ்கேனும் எடுக்கப்படும். நாங்கள் நம்பிக்கையுடன் உள்ளோம். எனினும் அவர் இந்த வருட ஐபிஎல் போட்டியில் மீண்டும் பங்கேற்பார் என எண்ணவில்லை. அவருடைய கவனம் இனி உலகக் கோப்பைப் போட்டியில் நல்ல உடற்தகுதியுடன் பங்கேற்பது குறித்து இருக்கும். இன்று ஓரளவு அவர் அசெளகரியத்துடன் இருந்தார். எனினும் நாளைதான் துல்லியமாக அவருடைய நிலை குறித்துத் தெரியவரும். காயம் தீவிரமாக இல்லையென்றாலும் இப்போது அதன் நிலை சரியாக இல்லை என்று கூறியுள்ளார்.