ஐபிஎல்: முகத்தைத் தாக்கிய பந்து! காயத்துடன் வெளியேறிய இளம் விக்கெட் கீப்பர்! (விடியோ)
வலது கண் அருகே பந்து பட்டதால் இஷான் நிலைகுலைந்து போனார். கீழே விழுந்து துடிதுடித்தார்...
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் 14-வது ஆட்டம் மும்பைக்கும்-பெங்களூரு அணிகள் இடையே வான்கடே மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற பெங்களூரு அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 213 ரன்களை மும்பை அணி எடுத்திருந்தது. ஆனால், 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு பெங்களூரு அணி 167 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இறுதியில் 46 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி தனது முதல் வெற்றியைப் பெற்றது.
இந்த ஆட்டத்தில் பெங்களூர் அணி ஆடிக்கொண்டிருந்தபோது 13-வது ஓவரில் ஒரு சம்பவம் நடைபெற்றது. ஃபீல்டிங் செய்த பாண்டியா அதை விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் பக்கம் வீசினார். சரியாகப் பிடிப்பதற்கு முன்பே, அந்த த்ரோ, இஷானின் முகத்தைத் தாக்கியது. வலது கண் அருகே பந்து பட்டதால் இஷான் நிலைகுலைந்து போனார். கீழே விழுந்து துடிதுடித்தார். உடனே மருத்துவக்குழு விரைந்து வந்து ஆடுகளத்திலேயே அவருக்கு சிகிச்சை அளித்தார்கள். காயம்பட்ட பகுதியில் உடனடியாகச் சிவந்துபோனது.
19 வயது இஷான் கிஷன் பிறகு மைதானத்திலிருந்து வெளியேறினார். அவருக்குப் பதிலாக மாற்று விக்கெட் கீப்பராக ஆதித்யா தரே செயல்பட்டார்.