திருச்சி செல்கிறார் முதல்வர் விஜய்! விமான நிலையத்திலிருந்து சாலைவலம்!
முதல்வர் விஜய் நாளை(ஜூன் 1) திருச்சியில் சாலைவலம் மேற்கொள்ளவிருப்பது தொடர்பாக...
திருச்சி கிழக்குத் தொகுதி உள்பட திருச்சி மாவட்டத்தின் 6 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகத்துக்கு வெற்றி தேடித் தந்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் முதல்வர் ஜோசப் விஜய் நாளை(ஜூன் 1) திருச்சி செல்கிறார்.
தவெக தலைவரும், முதல்வருமான ஜோசப் விஜய், தேர்தல் வெற்றிக்குப் பிறகு முதல்முறையாக முதல்வர் பதவியுடன் திருச்சிக்கு வருகிறார். சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சிக்கு திங்கள்கிழமை மாலை வரும் அவர், விமான நிலையத்திலிருந்து பிரத்யேக வாகனத்தில், பலத்தப் பாதுகாப்புடன் திருச்சி-புதுக்கோட்டை சாலை, சுப்பிரமணியபுரம், டிவிஎஸ் சோதனைச் சாவடி, பழைய பால்பண்ணை, திருச்சி-சென்னை புறவழிச் சாலை, சஞ்சீவி நகர், சத்திரம் பேருந்து நிலையம் வழியாக தூய வளனார் கல்லூரி திடலுக்கு வருகிறார்.
இதற்காக திடலில் விழா மேடையும், பந்தலும் அமைக்கப்படுகிறது. மாலை 4 மணிக்கு நடைபெறும் விழாவில் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து உரையாற்றுகிறார்.
Advertisement
Advertisement
முதல்வர் கூட்டம் நடைபெறும் தூய வளனார் கல்லூரி மைதானத்தில் மேடை மற்றும் பிரம்மாண்ட பந்தல் என விழாவுக்கான ஏற்பாடுகள் இரவு, பகலாக நடைபெறுகின்றன. முதல்வர் சிறிது ஓய்வெடுக்கும் வகையில் விழா மேடைக்கு அருகே தனியே 3 குளிரூட்டப்பட்ட குடில்களும் தயாராகின்றன.
சாலையில் மக்கள் சந்திப்பு
கட்சி தொடங்கிய பிறகு தேர்தல் பிரசாரத்தை முதன்முதலாக திருச்சியிலிருந்துதான் தொடங்கிய தவெக தலைவர் ஜோசப் விஜய், தேர்தல் வெற்றிக்குப் பிறகு நடைபெறும் முதல் நன்றி அறிவிப்புக் கூட்டத்தையும் திருச்சியில் தொடங்குகிறார்.
திருச்சி விமான நிலையத்திலிருந்து, தூய வளனார் கல்லூரி வரை சுமார் 13 கி.மீ. தொலைவுக்கு சாலையில் மக்களைச் சந்திக்கவுள்ளார்.
இதற்காக சாலையின் இருபுறமும் தடுப்புகள் அமைத்து தொண்டர்கள், பொதுமக்களை நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன. சாலையில் வரும் முதல்வர் ஜோசப் விஜய், வாகனத்திலிருந்தபடியே தொண்டர்களையும், மக்களையும் பாா்த்து கையசைத்தபடியே செல்லவுள்ளதாகவும் கூறப்படுகிறது.