ஆசிய கோப்பை, டி20 உலக கோப்பை வரும் நிலையில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா இந்திய அணியில் அழுத்தமில்லாத சூழ்நிலையை உருவாக்குவது முக்கியமென கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய கேப்டனாக ரோகித் சர்மா பொறுப்பேற்றதிலிருந்து 7 இருதரப்பு தொடர்களில் 6 தொடர்களில் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மழையின் காரணமாக ஒரு தொடரில் தென்னாப்பிரிக்காவுடன் 2-2 என சமநிலையில் முடிந்தது. ஆசியக்கோபை,உலக கோப்பை வரும் நிலையில் இந்தியக் கேப்டன் ரோகித் சர்மா ஆங்கில சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
அணியின் சூழ்நிலையை மிகவும் அழுத்தம் நிறைந்த இடமாக வைத்துக்கொள்ளாமல் இருப்பதே அணியின் தலைவராக எனது முக்கிய பொறுப்பாக கருதுகிறேன். வீரர்கள் அணியில் வந்து ஜாலியாக விளையாடிவிட்டு போக வேண்டுமென நினைக்கிறேன். ஏனெனில் அழுத்தம் அவர்களை அதிகமாக பாதிக்க அனுமதிக்க மாட்டேன்.
பந்து வீச்சாளராக இருக்கும்போது கையில் பந்து இருந்தாலே அழுத்தமாக இருக்கும். அதேபோல நடுவரிசையில் பேட்டிங் விளையாடும்போதும் அழுத்தமிருக்கும். ஒரு அணியின் கேப்டனோ, பயிற்சியாளரோ இதில் உங்களுக்கு உதவ முடியாது. ஆனால் நீங்களே உங்களுக்கு உதவிக்கொள்ள முடியும். இது முற்றிலும் உங்கள் பொறுப்பேயானாலும் இந்த காரணிகளை பார்த்துக்கொள்வது கேப்டனாக எனது பொறுப்பாகும். இதுமாதிரி காரணங்களால் கூட போட்டியின் நிலைமை மாறும்.
தனிப்பட்ட ஒருவரின் பலம் பலவீனம் தெரிந்திருக்க வேண்டும். அணி ஒருவரிடமிருந்து எதை எதிர்பார்க்கிறதென தெளிவாக இருக்க வேண்டும். அணிக்கு என்ன வேண்டும் என்பதை வீரரிடம் சொல்லிவிட்டால் வீரர்கள் சிறப்பாக செயல்பட வாய்ப்பிருக்கிறது. இதுமாதிரி விஷயங்களை நான் எப்போதும் கவனத்தில் வைத்துக் கொள்வேன்.