முகப்பு
செய்திகள்

கிராண்ட் ஸ்லாம் போட்டிக்கு விடை கொடுத்த சானியா மிர்சா: இறுதிச்சுற்றில் தோல்வி!

கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதிச்சுற்றில் பங்கேற்ற சானியா மிர்சா ஜோடி இறுதிச்சுற்றில் தோல்வியடைந்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2023 at 11:48 AM
பகிர்:
Updated On : 6 பிப்ரவரி, 2024 at 6:24 PM

ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதிச்சுற்றில் பங்கேற்ற சானியா மிர்சா ஜோடி இறுதிச்சுற்றில் தோல்வியடைந்துள்ளது. 

மெல்போர்னில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் மகளிர் இரட்டையர் பிரிவில் 2-வது சுற்றில் தோல்வியடைந்த இந்தியாவின் சானியா மிர்சா, கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணாவுடன் இணைந்து விளையாடினார். 

அரையிறுதிச் சுற்றில் சானியா மிர்சா - ரோஹன் போபண்ணா ஜோடி, அமெரிக்க, இங்கிலாந்து ஜோடியான டிசிரே - ஸ்குப்ஸ்கியை 7-6(5), 6-7(5), 10-6 எனக் கடுமையான போராட்டத்துக்குப் பிறகு வீழ்த்தியது. இதனால் இந்தியர்கள் இருவரும் கலப்பு இரட்டையர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்கள். 

Advertisement

இந்நிலையில் இன்று நடைபெற்ற இறுதிச்சுற்றில் பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஸ்டெஃபானி - மாடோஸ் ஜோடி, சானியா மிர்சா - ரோஹன் போபண்ணா ஜோடியை 7-6(2), 6-2 என வீழ்த்தி பட்டம் வென்றது. இதையடுத்து இத்துடன் கிராண்ட் ஸ்லாம் போட்டிக்கு விடை கொடுத்துள்ளார் சானியா மிர்சா. 

பிப்ரவரி மாதத்துடன் டென்னிஸ் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக சானியா மிர்சா சமீபத்தில் அறிவித்தார். ஆறு கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றவர் 35 வயது சானியா மிர்சா. இரட்டையர் பிரிவில் உலகளவில் நெ.1 வீராங்கனையாகவும் இருந்துள்ளார். கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனை. 2021-ல் இரட்டையர் ஆட்டத்தில் 43-வது பட்டம் வென்றார். அடுத்த மாதம் பிப்ரவரி 19 முதல் நடைபெறவுள்ள துபை டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடிவிட்டு டென்னிஸிலிருந்து ஓய்வு பெறுவதாக சானியா மிர்சா அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.