நியூசி. வெற்றி: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்றுக்கு இந்தியா தகுதி
முதல் டெஸ்டைப் பரபரப்பான முறையில் நியூசிலாந்து அணி வென்றது.
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டைப் பரபரப்பான முறையில் நியூசிலாந்து அணி வென்றது. இதையடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு இந்தியா தகுதியடைந்துள்ளது.
கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற டெஸ்டில் கடைசி இன்னிங்ஸில் 285 ரன்கள் எடுத்தால் நியூசிலாந்துக்கு வெற்றி என்கிற நிலையில் இன்றைய 5-வது நாள் ஆட்டம் மழை காரணமாகத் தாமதமாகத் தொடங்கியது. இதனால் டெஸ்ட் ஆட்டம் டிரா ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நியூசிலாந்து பேட்டர்கள் விரைவாக ரன்கள் எடுத்து இலக்கை நோக்கி வெற்றிகரமாகப் பயணித்தார்கள். டேரில் மிட்செல் 86 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 81 ரன்கள் எடுத்தார். மூத்த வீரர் கேன் வில்லியம்சன் கடைசிவரை களத்தில் நின்று நியூசிலாந்து அணியை வெற்றி பெறச் செய்தார். சதமடித்த பிறகும் இதர பேட்டர்கள் ஆட்டமிழந்த நிலையில் கீழ்வரிசை பேட்டர்களைக் கொண்டு இலக்கை அடைந்தார்.
கடைசி ஓவரில் வெற்றிக்கு 8 ரன்கள் தேவைப்பட்டன. வில்லியம்சன் தொடர்ந்து போராடி கடைசிப் பந்தில் மிக வேகமாக ஓடி வெற்றியை நியூசிலாந்துக்கு வழங்கினார். அவர் 194 பந்துகளில் 121 ரன்கள் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இலங்கை அணியும் கடைசி ஓவர் வரை வெற்றிக்காகத் தீவிரமாகப் போராடியது.
Advertisement
Advertisement
இலங்கையின் தோல்வி காரணமாகப் புள்ளிகளின் அடிப்படையில் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றுக்குத் தகுதியடைந்துள்ளது.
ஜூன் 7-11 தேதிகளில் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.