லடாக்கில் 11,500 அடி உயரத்தில் கால்பந்து திடல்..! துணைநிலை ஆளுநர் திறந்து வைப்பு!
லடாக்கில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் மிக உயரமான கால்பந்து திடல் குறித்து...
லடாக் யூனியன் பிரதேசத்தில் துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா இந்தியாவின் மிக உயரமான ஆஸ்ட்ரோ டர்ஃப் கால்பந்து திடலை திறந்து வைத்தார்.
லேவில் அமைந்துள்ள இந்தத் திடல் 11,500 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் புதியதாக விஐபி அரங்கும் கட்டப்பட்டுள்ளன. இதில் 8 லேன்கள் கொண்ட ஓடுபாதையும் அமைக்கப்பட்டுள்ளன.
உலக தரத்திலான இந்த நவீன கட்டமைப்பு ரூ.30 கோடி செலவில் கட்டமைக்கப்பட்டுள்ளது. விஐபி அரங்கத்திற்கு மட்டும் சுமார் ரூ.19.85 கோடி செலவிடப்பட்டுள்ளது. ஓடுபாதை ரூ.10.50 கோடியில் கேலோ இந்தியா திட்டத்தில் செலவிடப்பட்டுள்ளது.
Advertisement
இந்தத் திடலுக்கு அருகில் 64 அறைகள் வீரர்கள், பயிற்சியாளர்கள், விளையாட வரும் அணியினர் தங்குவதற்கு ஏற்ப உருவாக்கப்பட்டுள்ளது.
லடாக்கின் கடினமான காலநிலைக்கும் தகுந்த மாதிரி ஆண்டு முழுவதும் விளையாட்டுகள் நடைபெறும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து லடாக் துணைநிலை ஆளுநர் சக்சேனா, “லடாக் வரலாற்றில் முதல்முறையாக, இளம் வீரர்கள் சர்வதேச அளவிலான கட்டமைப்பில் தங்களது சொந்த மண்ணில் விளையாட இருக்கிறார்கள். பிரதமர் மோடிக்கு நன்றி.
விளையாட்டு என்பது கோப்பைகளை வெல்வது மட்டுமல்ல; ஒழுக்கம், தன்னம்பிக்கை, நலமான உடல் நலத்திற்கான படிக்கல்லாகவும் இருக்கிறது.
மிக உயரமான இடத்தில் பயிற்சி மேற்கொள்வதால் வீரர்களுக்கு சகிப்புத்தன்மை, மீள்திறன், பலமான உடல்நிலையை அடைவார்கள்” என்றார்.
இந்த விழாவில் 400 மீ. கலப்பு ரிலே ஓட்டப்பந்தயமும் நட்பு ரீதியிலான கால்பந்து போட்டியும் நடத்தப்பட்டது.