முகப்பு
தமிழ்நாடு

இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானம்: சமரசத்துக்கு இன்னமும் வாய்ப்புள்ளது: சுப்பிரமணியன் சுவாமி நம்பிக்கை

இலங்கைக்கு எதிரான போர்க்குற்றம் தொடர்பான மசோதா விவகாரத்தில் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும், சமரசம்

Updated On : 12 மார்ச், 2013 at 6:43 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:05 PM

இலங்கைக்கு எதிரான போர்க்குற்றம் தொடர்பான மசோதா விவகாரத்தில் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும், சமரசம் ஏற்பட இன்னமும் வாய்ப்பு இருப்பதாகவும் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரின்போது பெரிய அளவில் மனித உரிமை மீறல்கள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. போர்க் குற்றங்கள் குறித்து சுதந்திரமான, சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இலங்கைக்கு எதிராக, அமெரிக்கா கடுமையான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது. அனைத்துத் தரப்பாலும் ஏற்கத்தக்க தீர்மானம் நிறைவேற வழிகாண்பதற்காக அமெரிக்காவுடன் பேச்சு நடத்த முடியாது என்று இலங்கை திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டது.

சுவாமி நம்பிக்கை: ÷இந்நிலையில், இந்த விவகாரத்தில் மத்தியஸ்தராகச் செயல்பட்டு வரும் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

Advertisement

இந்த விவகாரம் தொடர்பாக இலங்கை அதிபருக்கு நெருக்கமான அதிகாரிகள், அமெரிக்க வெளியுறவுத்துறையின் மூத்த அதிகாரிகள் மற்றும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் ஆகியோர் விவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். எனவே இந்த விவகாரத்தில் இன்னமும் சமரசத்துக்கு வாய்ப்பு உள்ளது. அமெரிக்கா இப்போது சுற்றில் விட்டுள்ள தீர்மானத்தில் கோரப்பட்டுள்ளது போல், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை தேவை என்று சமரசத் தீர்மானம் வலியுறுத்தாது. மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கை அரசே உரிய முறையில் விசாரணை நடத்த வேண்டும் என்று அமெரிக்காவின் தீர்மானம் இறுதியாக்கப்படும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.

இந்தியாவின் கவலை: நான் இலங்கை அதிபர் ராஜபட்ச, அந்நாட்டின் பாதுகாப்புச் செயலாளர் கோதபய ராஜபட்ச ஆகியோரைக் கொழும்பில் கடந்த மாதம் 28ஆம் தேதி சந்தித்தேன். அமெரிக்க வெளியுறவுத்துறை துணை அமைச்சர் ராபர்ட் பிளேக்கை இம்மாத முதல் வாரத்தில் சந்தித்தேன். அவரிடம், சர்வதேச விசாரணையை ஏற்கும்படி இலங்கையிடம் கோருவது நடைமுறைக்கு ஒத்துவராது என்பதை திட்டவட்டமாக எடுத்துக் கூறினேன். இது போன்ற கோரிக்கையால் இந்தியாவும் மகிழ்ச்சியடையாது என்பதையும் கூறினேன். ஏனெனில், இதை இந்தியா ஏற்றுக் கொண்டால் காஷ்மீரில் நடந்த மனித உரிமை மீறல் குறித்து சர்வதேச விசாரணை தேவை என்ற கோரிக்கை எழுவதற்கு வாய்ப்புண்டு.

ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் நிறைவேற்றப்படும் எந்தவொரு தீர்மானத்துக்கும் ஐநா பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல் அளித்தால்தான் மதிப்பும், பலமும் கிடைக்கும். இப்போது அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மானத்தைப் பொறுத்த வரை, அதற்கு ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் ஒப்புதல் கிடைக்க வாய்ப்பில்லை. ஏனெனில் ரஷியாவோ, சீனாவோ தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி இத்தீர்மானத்தை நிராகரித்து விடும். இந்த யதார்த்த நிலைமையை பிளேக்கும் மற்ற அதிகாரிகளும் புரிந்து கொண்டனர்.

அமெரிக்கா எச்சரிக்கை: இப்போதைய தீர்மானத்தையும் அமெரிக்கா மிகுந்த எச்சரிக்கையுடன் உருவாக்கியுள்ளது. குறிப்பாக, போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை தேவை என்று நேரடியாகக் கோராமல், ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவி பிள்ளையின் பரிந்துரையைக் குறிப்பிட்டுள்ளது.

அந்தப் பரிந்துரையில் சுதந்திரமான, சர்வதேச விசாரணை தேவை என்று கூறப்பட்டுள்ளதை அமெரிக்கா மேற்கோள் காட்டியுள்ளது.

புலிகள் அமைப்புக்குப் புத்துயிர்: இத்தீர்மானத்தால் விடுதலைப்புலிகள் அமைப்புக்குப் புத்துயிர் கிடைப்பதற்கோ, இலங்கையில் பிரிவினைவாதம் மற்றும் தமிழ்த் தீவிரவாதம் மீண்டும் உருவாகவோ வாய்ப்பு ஏற்படக் கூடாது என்பதை நான், அமெரிக்க அதிகாரிகளிடம் கூறினேன்.

விடுதலைப்புலிகளின் தோல்விக்கு அமெரிக்கா பங்களித்தது என்பதையும் அவர்களுக்கு நினைவூட்டினேன். புலிகளின் கப்பல்களை அமெரிக்க ஆயுதங்கள் மூலமே இலங்கையால் அழிக்க முடிந்தது. இத்தீர்மான விஷயத்தில் ராஜபட்ச அரசும் தனது நிலைப்பாட்டை மென்மையாக்கிக் கொள்ளும் என்று எதிர்பார்க்கிறேன்.

ஏனெனில் இலங்கையின் ஏற்றுமதிச் சந்தைகளில் ஒன்றாக அமெரிக்கா இருக்கிறது என்றார் சுப்பிரமணியன் சுவாமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.