முகப்பு
தமிழ்நாடு

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்கக் கோரி தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

இலங்கைத் தமிழர் பிரச்னையில் ஐ.நா. சபை மனித உரிமை ஆணையத்தில் கொண்டுவரப்படும் தீர்மானத்தை இந்திய அரசு

Updated On : 12 மார்ச், 2013 at 1:51 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:05 PM

இலங்கைத் தமிழர் பிரச்னையில் ஐ.நா. சபை மனித உரிமை ஆணையத்தில் கொண்டுவரப்படும் தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்த லயோலா கல்லூரி மாணவர்களை போலீஸார் நள்ளிரவில் கைது செய்து மருத்துவமனையில் சேர்த்தனர்.

மாணவர்களை கல்லூரி நிர்வாகம் அழைத்துச் சென்றுவிட்டது.

இதற்கிடையே லயோலா கல்லூரி மாணவர்களைக் கைது செய்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாநிலம்  முழுவதும் ஆங்காங்கே கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். ஐ.நா. சபையில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்படும் தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த 3 நாள்களாக லயோலா கல்லூரி மாணவர்கள் 8 பேர் கோயம்பேட்டில் உண்ணாவிரதம் இருந்தனர்.  இப்போராட்டத்திற்கு பல அரசியல் கட்சியினரும், பல்வேறு சமூக அமைப்பினரும் ஆதரவு தெரிவித்து வந்தனர்.

நள்ளிரவில் மாணவர்கள் கைது: இந்த நிலையில், உண்ணாவிரதம் இருந்த மாணவர்களை

ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் போலீஸார் கைது செய்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில்  சேர்த்தனர்.  அப்போது மாணவர்களுக்கு ஆதரவாக உண்ணாவிரதப் பந்தலில் குரல் கொடுத்த மே, 17 இயக்கத்தினர், மக்கள் எழுச்சி இயக்கம், பெரியார் திராவிட இயக்கம், நாம் தமிழர் கட்சியினர் உள்ளிட்ட 119 பேரை கைது செய்து அரும்பாக்கத்தில் உள்ள சமூக நலக்கூடத்தில் அடைத்தனர். மேலும், காலை 10 மணி வரை சிகிச்சை பெற்று வரும் மாணவர்களைச் சந்திக்க யாரையும் போலீஸார் அனுமதிக்கவில்லை.

இருப்பினும் ஏராளமான கல்லூரி மாணவர்கள், அரசியல் பிரமுகர்கள், சமூக அமைப்பினர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனை அருகில் குவிந்ததால் அரசு மருத்துவமனையைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.  கைது செய்யப்பட்ட அனைவரையும் திங்கள்கிழமை காலை போலீஸார் விடுவித்தனர்.

மாநிலம் முழுவதும் போராட்டம்: லயோலா மாணவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் மாநிலக் கல்லூரி, பச்சையப்பா, வைஷ்ணவ கல்லூரி மற்றும் பொன்னேரி அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பல கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம், மறியல், முற்றுகை போராட்டங்களை நடத்தினர்.

கைது செய்யவில்லை - போலீஸ் மறுப்பு: மாணவர்களைக் கைது செய்ததற்கு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருவதை அடுத்து இதுதொடர்பாக  போலீஸார் விளக்கமளித்துள்ளனர். நாங்கள் யாரையும் கைது செய்யவில்லை. மது ஒழிப்பு போராட்டத்திற்காக உண்ணாவிரதம் இருந்த சசிபெருமாளை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தது போல், உண்ணாவிரதம் இருந்த மாணவர்களின் உடல் நிலை கருதி அவர்களை சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தோம். அப்போது அதற்கு இடையூறாக இருந்தவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்திவிட்டு பின்னர் விடுவித்தோம் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.