கூத்தங்குழியில் நாட்டு வெடிகுண்டுகள் வீச்சு?
கூடங்குளம் அணுஉலையை கடல்வழியாக முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றபோது கூத்தங்குழி மீனவர் கிராமத்தில்
கூடங்குளம் அணுஉலையை கடல்வழியாக முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றபோது கூத்தங்குழி மீனவர் கிராமத்தில் 2 நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டதாக திங்கள்கிழமை பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக கூடங்குளம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கூடங்குளம் அணுஉலையை கடல்வழியாக முற்றுகையிடும் போராட்டம் நடந்து கொண்டிருந்தபோது திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. விஜயேந்திர பிதரி, வள்ளியூர் டி.எஸ்.பி. ஸ்டான்லி ஜோன்ஸ் ஆகியோர் அதிரடிப்படையினருடன் கூத்தங்குழி கிராமத்தை நோக்கி அணிவகுத்துச் சென்றனர்.
இதுகுறித்து கடலில் போராட்டம் நடத்திய போராட்டக்குழு நிர்வாகிகளுக்குத் தெரியவந்ததும், அவர்களும் அதை ஒலிபெருக்கியில் அறிவித்தனர். இந்நிலையில், அங்குள்ள ஆலய மணி அடிக்கப்பட்டது. உடனே ஏராளமானோர் திரண்டனர்.
Advertisement
அப்போது, போலீஸாருக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் சிலர் 2 நாட்டு வெடிகுண்டுகளை ஆளில்லாத இடத்தில் வீசியதாகத் தெரிகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், கூத்தங்குழி கிராமத்தை நோக்கி சென்ற போலீஸார் அந்தக் கிராமத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் சிறிது நேரம் நின்றுவிட்டு திரும்பிச் சென்றுவிட்டனராம்.
கூத்தங்குழியில் நாட்டு வெடிகுண்டுகள் வீசியதாக அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் மீதும், 144 தடை உத்தரவை மீறி போராட்டத்துக்குத் திரண்டதாக பலர் மீதும் கூடங்குளம் போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர்.