தமிழில் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுத கட்டுப்பாடு: மார்க்சிஸ்ட், பாஜக கண்டனம்
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் எழுத முடியாதவாறு அறிவிக்கப்பட்ட புதிய
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் எழுத முடியாதவாறு அறிவிக்கப்பட்ட புதிய விதிகளை வாபஸ் பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
இது குறித்து அவர்கள் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
ஜி. ராமகிருஷ்ணன்: ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் எழுத முடியாதவாறு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சில மாற்றங்களைச் செய்துள்ளது. இந்தி, ஆங்கில மொழி ஆதிக்கத்தை திணிப்பதாகவும், கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை மாணவர்களை சமநிலையற்ற போட்டிக்கு நிர்பந்திக்கும் வகையிலும் இந்த மாற்றம் அமைந்துள்ளது.
Advertisement
முதல் நிலைத் தேர்வு உள்ளிட்ட அனைத்துத் தேர்வுகளையும் அனைத்து மொழிகளிலும் எழுத வாய்ப்பளிக்க வேண்டும். தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளிலும் கேள்வித் தாள்கள் கொடுக்கப்பட வேண்டும். பிரதான தேர்வில் ஆங்கிலத்துக்கு 100 மதிப்பெண் அளிப்பதைக் கைவிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளுக்காக ஜனநாயக சக்திகள் குரல் கொடுக்க வேண்டும்.
பொன். ராதாகிருஷ்ணன்: எந்த மொழி வழியில் பட்டப்படிப்பு படித்தார்களோ அந்த மொழியில் மட்டுமே ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட தேர்வுகளை எழுத முடியும் என மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதன் மூலம் கிராமப்புற மாணவர்கள் தமிழில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுகளை எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கிராமப்புற மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த முடிவுகளை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று பொன். ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.