பிளஸ் 2 இயற்பியல் எளிமை; பொருளாதாரம் கடினம்
பி.இ., எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட தொழில் படிப்புகளில் சேருவதற்கு முக்கியப் பாடமான இயற்பியல் கேள்வித்தாள்
பி.இ., எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட தொழில் படிப்புகளில் சேருவதற்கு முக்கியப் பாடமான இயற்பியல் கேள்வித்தாள் எளிமையாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.
தமிழகம் முழுவதும் 8 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர். இதில் தொழில்படிப்புகளில் சேருவதற்கான முக்கியப் பாடத் தேர்வுகள் திங்கள்கிழமை தொடங்கின.
இயற்பியல் தேர்வில் மற்ற வினாக்கள் எளிதாக இருந்தபோதிலும் சில ஒரு மதிப்பெண் வினாக்கள் தங்களை குழப்பம் அடையச் செய்யும் வகையில் இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.
Advertisement
Advertisement
குறிப்பாக வினாக்கள் 7, 15, 16, 20 ஆகியவை மாணவர்களை சிந்தித்து பதிலளிக்கச் செய்யும் விதமாக கேட்கப்பட்டிருந்தன.
இதனால் நிகழாண்டில் ஒரு மதிப்பெண் வினாக்கள் 30-க்கும் சரியான விடையளிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை சற்று குறையும் என்கிறார் சென்னையைச் சேர்ந்த இயற்பியல் ஆசிரியர் சுதாகர்.
பொருளாதாரம் கடினம்: தமிழகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பிளஸ் 2 பொருளாதாரத் தேர்வில் மாணவர்கள் முழு மதிப்பெண் ("சென்டம்') பெறுவது சற்று கடினம் என்று மாணவர்களும் ஆசிரியர்களும் தெரிவித்தனர்.
பொருளாதாரத் தேர்வில் 20 மதிப்பெண்கள் பிரிவில் 6 வினாக்களில் 3-க்கு கட்டாயம் பதிலளிக்க வேண்டிய நிலையில், வினாக்கள் 76, 79, 80, 81 ஆகியவை எப்போதும் போல வரைபடம், அட்டவணை போன்ற வகையில் இல்லாமல் கட்டுரை வடிவில் எழுதும்படி கேட்கப்பட்டிருந்தது.
இது சராசரி மாணவர்களுக்குப் பின்னடைவாக அமையும் என்றார் ஆசிரியர் வெங்கடாஜலம்.
45 மாணவர்கள் பிடிபட்டனர்: இயற்பியல் தேர்வில் காப்பியடித்ததாக 22 மாணவர்கள் பிடிபட்டனர். பொருளாதாரத் தேர்வில் காப்பியடித்ததாக 23 மாணவர்கள் பிடிபட்டனர். கடலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, நாமக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் காப்பியடித்ததாக இந்த மாணவர்கள் பிடிபட்டனர்.