லயோலா கல்லூரி மாணவர்களின் உண்ணாவிரதம் வாபஸ்: போராட்டம் தொடரும் என அறிவிப்பு
இலங்கைத் தமிழர் பிரச்னை தொடர்பாக கோயம்பேட்டில் 4 நாள்களாக உண்ணாவிரதம் இருந்த லயோலா கல்லூரி
இலங்கைத் தமிழர் பிரச்னை தொடர்பாக கோயம்பேட்டில் 4 நாள்களாக உண்ணாவிரதம் இருந்த லயோலா கல்லூரி மாணவர்கள் 8 பேரின் உண்ணாவிரதம் திங்கள்கிழமை வாபஸ் பெறப்பட்டது.
இலங்கைத் தமிழர் பகுதிகளில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். ஐ.நா. சபையில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3 நாள்களாக லயோலா கல்லூரி மாணவர்கள் 8 பேர் சென்னை கோயம்பேட்டில் உண்ணாவிரதம் இருந்து வந்தனர்.
திருக்குறள் திலீபன் (18), பிரிட்டோ (20), அந்தோனி ஜாஜி (20), பார்வைதாசன் (20), பால் கென்னத் (20), மணி (19), சண்முக பிரியன் (19), லியோ ஸ்டாலின் (20) ஆகிய 8 பேர் கோயம்பேட்டில் உள்ள தனியார் கட்டடத்தில் மார்ச் 8-ம் தேதி இரவில் இருந்து சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர். இந்தப் போராட்டத்துக்கு அரசியல் கட்சிகளும் பல்வேறு அமைப்புகளும் ஆதரவு தெரிவித்தன. இந்த நிலையில் உண்ணாவிரதம் இருந்த மாணவர்கள் 8 பேரை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் போலீஸார் வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
Advertisement
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அங்கு போராட்டம் நடத்திய மாணவர்களையும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களையும் போலீஸார் கைது செய்தனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 8 மாணவர்களும் தங்கள் உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர். அவர்களுக்கு குளுக்கோஸ் மட்டும் ஏற்றப்ப்பட்டது. வேறு எதையும் சாப்பிட மறுத்துவிட்டனர்.
லயோலா கல்லூரி நிர்வாகம் சார்பில் ஜெயசீலன் என்பவர் மாணவர்களை சந்தித்துப் பேசினார். பின்னர் வெளியில் வந்த அவர் கூறும்போது, உண்ணாவிரதத்தை கைவிட்டுவிட்டு வேறு வழிகளில் போராடுமாறு மாணவர்களை கேட்டுக் கொண்டதாகத் தெரிவித்தார்.
உண்ணாவிரதம் வாபஸ்: இந்த நிலையில் லயோலா கல்லூரி நிர்வாகத்தினர் திங்கள்கிழமை மாலை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மாணவர்களைச் சந்தித்தனர்.
உங்கள் போராட்டம் நியாயமானது என்றாலும் அதற்கு உண்ணாவிரதம் இருப்பது சரியல்ல எனவும், வேறு வகையான அறப்போர் நடத்துங்கள் என கூறியதாகத் தெரிகிறது.
இதையடுத்து உண்ணாவிரதத்தை மாணவர்கள் கைவிட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
உண்ணாவிரதத்தை கைவிட்டாலும் தங்களது போராட்டம் வேறு வழியில் தொடரும் என்று மாணவர்கள் தெரிவித்தனர்.