முகப்பு
தமிழ்நாடு

கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் ரூ. 20க்கு ஒரு கிலோ அரிசி

அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் கிலோ ரூ. 20 விலையில் அரிசி விற்பனை, நகரங்களில்

Updated On : 22 மார்ச், 2013 at 6:22 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:06 PM

அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் கிலோ ரூ. 20 விலையில் அரிசி விற்பனை, நகரங்களில் கூட்டுறவு காய்கறி கடைகள் உள்ளிட்ட புதிய திட்டங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.

சட்டப் பேரவையில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட 2013-14-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் இது குறித்து கூறப்பட்டிருப்பதாவது:

மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வினால் அத்தியாவசியப் பொருள்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. விலை உயர்வைக் கட்டுப்படுத்த தமிழக அரசு புதிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அரிசி விலையைக் கட்டுப்படுத்த அமுதம் அங்காடிகள், கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் சிறப்பு அங்காடிகள் மூலமாக கிலோ ரூ. 20 விலையில் ஒரு லட்சம் மெட்ரிக் டன் அரிசி வெளிச்சந்தையில் விற்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Advertisement

அவசரக் காலங்களில் அத்தியாவசியப் பொருள்களை வாங்கி விநியோகம் செய்வதற்கான நிதி ரூ.50 கோடியில் இருந்து ரூ.100 கோடியாக அதிகரிக்கப்படும்.

ஓராண்டுக்கு நீட்டிப்பு: ரேஷன் கடைகளில் கிலோ ரூ. 30 விலையில் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, லிட்டர் ரூ.25 விலையில் பாமாயில் வழங்கும் திட்டம் 31-3-2014 வரை நீட்டிக்கப்படும்.

நகரங்களில் கூட்டுறவு காய்கறி கடைகள்: காய்கறிகளின் விலையைக் கட்டுப்படுத்த கூட்டுறவு அமைப்புகள், தோட்டக்கலைத் துறை ஆகியவற்றின் மூலம் விவசாயிகளையும், நுகர்வோரையும் இணைக்கும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் நகரங்களில் திறக்கப்படும்.

பொது விநியோகத் திட்டம் தொடரும்: மத்திய அரசு உத்தேசித்துள்ள உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் மீதான முடிவு எப்படி இருந்தாலும் பொது விநியோகத் திட்டத்தை தமிழக அரசு தொடர்ந்து செயல்படுத்தும். ரேஷன் கடைகளில் விலையில்லா அரிசி, மானிய விலையில் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. 2013-14-ம் நிதியாண்டில் உணவு மானியத்துக்காக ரூ.4,900 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

7 அரிசி ஆலைகளை நவீனமயமாக்க ரூ.32 கோடி: தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஏழு அரிசி ஆலைகள் ரூ.32.6 கோடியில் நவீனப்படுத்தப்படும் என்று பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.