ஜாமீன் கிடைத்தும் சிறையில் வாடும் 73 கைதிகளை விடுவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
ஜாமீன் கிடைத்தும் ஜாமீனில் விடுதலை பெறுவதற்கான நிபந்தனைகளை நிறைவேற்ற முடியாததால் தொடர்ந்து
ஜாமீன் கிடைத்தும் ஜாமீனில் விடுதலை பெறுவதற்கான நிபந்தனைகளை நிறைவேற்ற முடியாததால் தொடர்ந்து சிறையில் வாடும் கைதிகளில் 73 பேரை விடுவிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்ற வழக்குகளில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளை ஜாமீனில் விடுதலை செய்ய நீதிமன்றங்கள் உத்தரவிடும்போது சொந்த பிணைப் பத்திரம் தாக்கல் செய்வதோடு, இரண்டு நபர்களின் உத்தரவாதமும் அளிக்க வேண்டும் என்று பெரும்பாலான வழக்குகளில் நிபந்தனை விதிக்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த நிபந்தனைகளை நிறைவேற்ற முடியாததால் ஜாமீன் கிடைத்தும் விடுதலை ஆக முடியாமல் ஏராளமான கைதிகள் சிறைகளிலேயே வாடுவதாகவும், அந்தக் கைதிகளை விடுவிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரி வி. செந்தில்குமார் என்பவர் பொது நல மனு தாக்கல் செய்தார்.
Advertisement
இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதிகள் எலிபி தர்மாராவ், எம். வேணுகோபால் ஆகியோர் ஜாமீன் கிடைத்தும் பல மாதங்களாக விடுதலை ஆகாமல் சிறைகளிலேயே வாடும் கைதிகளில் 73 பேரை விடுவிக்குமாறு அண்மையில் உத்தரவிட்டுள்ளனர்.
ஜாமீன் கிடைத்தும் நிபந்தனைகளை நிறைவேற்ற முடியாததால் தொடர்ந்து சிறையிலேயே உள்ள கைதிகள் பற்றிய விவரங்களைக் கேட்டிருந்தோம். அத்தகைய நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 12 மத்திய சிறைகளிலும் மொத்தம் 163 கைதிகள் உள்ளதாக சிறை கண்காணிப்பாளர்கள் விவரங்களைத் தாக்கல் செய்தனர்.
உச்ச நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகள், வழக்கின் தன்மை உள்ளிட்ட பல காரணங்களால் அந்த கைதிகள் அனைவரையுமே விடுதலை செய்ய இயலாவிட்டாலும், அவர்களில் 73 கைதிகளை விடுதலை செய்யுமாறு உத்தரவிடுகிறோம்.
கைதிகளிடம் இருந்து சொந்த பிணைப் பத்திரங்களை மட்டும் பெற்றுக் கொண்டும், வேறு இரண்டு நபர்களின் உத்தரவாதத்தைக் கேட்காமலும் அந்தக் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர்.