வெளிநாட்டு கார் இறக்குமதி விவகாரம்: மு.க.ஸ்டாலின் வீடு உள்பட 18 இடங்களில் சி.பி.ஐ. சோதனை
வெளிநாட்டு கார் இறக்குமதி செய்ததில் முறைகேடு நடைபெற்றது தொடர்பாக முன்னாள் துணை முதல்வரும்,
வெளிநாட்டு கார் இறக்குமதி செய்ததில் முறைகேடு நடைபெற்றது தொடர்பாக முன்னாள் துணை முதல்வரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் வீடு உள்பட சென்னையில் 18 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இது குறித்து சி.பி.ஐ. தரப்பில் கூறப்பட்டதாவது:
கேரள மாநிலம் பத்தனம்திட்டாவைச் சேர்ந்த அலெக்ஸ் ஜோசப் என்பவரை வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரி உத்தரவின்பேரில் கேரள போலீஸார் ஆந்திர மாநிலம் ஹைதராபாதில் 2011-ல் கைது செய்தனர்.
Advertisement
ஜோசப், வெளிநாட்டு கார்களை இறக்குமதி செய்து அதை இந்தியாவில் உள்ள அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், நடிகர், நடிகைகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களிடம் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.
கடந்த 5 ஆண்டுகளில் அவர் பல நூறு கோடி மதிப்புள்ள 33 வெளிநாட்டு கார்களை இறக்குமதி செய்துள்ளார். இதற்கான விதிமுறைகளைப் பின்பற்றாமலும், வரியைச் செலுத்தாமலும் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் அரசுக்கு ரூ.48 கோடி வரை வரி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த வழக்குத் தொடர்பாக ஜோசப்பை கைது செய்த வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், அதன் பின்னர் இந்த வழக்கில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததாகத் தெரிகிறது. இதையடுத்து இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. இது தொடர்பாக காரை இறக்குமதி செய்தவர், வழக்கில் தொய்வு ஏற்படுத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் ஆகியோர் மீது 9 பிரிவுகளின் கீழ் சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனர்.
இதன் அடுத்தக் கட்ட நடவடிக்கையாக வழக்குக்கான ஆதாரங்களையும், தடயங்களையும் சேகரிக்கும் வகையில் அலெக்ஸ் ஜோசப்பிடமிருந்து கார் வாங்கிய நபர்களிடம் விசாரணை நடத்தி, ஆவணங்களைக் கைப்பற்ற சி.பி.ஐ. அதிகாரிகள் திட்டமிட்டனர். இதன் ஒரு பகுதியாக சென்னையில் 18 இடங்களில் ஒரே நேரத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை செய்தனர்.
மு.க.ஸ்டாலின் வீட்டில் சோதனை: ஜோசப்பிடம் இருந்து மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி "ஹம்மர் கார்' வாங்கியிருந்தார். இதன் மதிப்பு ரூ.2.5 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.
சென்னை தேனாம்பேட்டை செனடாப் சாலையில் உள்ள ஸ்டாலின் வீட்டுக்கு வியாழக்கிழமை காலை 7.30 மணியளவில் சி.பி.ஐ. அதிகாரிகள் சென்றனர். வீட்டில் அப்போது உதயநிதி மட்டும் இருந்தார். ஸ்டாலின் நடைப்பயிற்சிக்காக சென்றிருந்தாராம்.
இதையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள், உதயநிதியிடம் காரை பற்றிய தகவலைக் கேட்டறிந்தனர். சி.பி.ஐ. அதிகாரிகள் வந்தது குறித்த தகவலறிந்த ஸ்டாலினும் வீட்டுக்கு சிறிது நேரத்தில் வந்தார். அவரிடமும் சி.பி.ஐ. அதிகாரிகள், அந்த கார் தொடர்பாக விசாரணை செய்தனர்.
பின்னர் காரையும், காருக்குரிய ஆவணங்களையும் சி.பி.ஐ. அதிகாரிகள் கேட்டனராம்.
ஆனால் கார் ஒர்க் ஷாப்பில் இருப்பதாகவும், காரின் ஆவணங்கள் வேறு இடத்தில் இருப்பதால் சிறிது நேரத்தில் சி.பி.ஐ. அலுவலகத்தில் கொடுப்பதாகவும் உதயநிதி உத்தரவாதம் அளித்தார். இதைத் தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
சுமார் 45 நிமிஷம் நடைபெற்ற இந்த விசாரணை குறித்து சி.பி.ஐ. அதிகாரிகளிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, விசாரணை குறித்த விரிவான அறிக்கை பின்னர் அளிக்கப்படும் என்று தெரிவித்தனர்.
இந்த தகவலறிந்த திமுக தொண்டர்கள் ஸ்டாலின் வீட்டு முன் குவிந்தனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
17 கார்கள் பறிமுதல்: இதேபோல வெளிநாட்டு கார் வாங்கிய பிரபல தொழிலதிபர்கள், நடிகர்கள், அரசியல்வாதிகள் உள்பட மேலும் 17 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை செய்தனர். இச் சோதனையில் கார் தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தெரிகிறது.
மேலும் 17 வெளிநாட்டு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக சி.பி.ஐ. தரப்பில் கூறப்படுகிறது.
இதன் அடுத்தக் கட்டமாக வெளிநாட்டு கார் வாங்கியுள்ள பிறர் வீடுகளிலும் சோதனை நடத்தப்படும் என சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்தனர்.
சோதனை நடைபெற்ற இடங்கள்
வெளிநாட்டு கார்கள் இறக்குமதியில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்குக்காக சென்னையில் 18 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை நடத்தினர்.
இந்த சோதனை நடத்துவதற்காக தில்லியில் இருந்து சி.பி.ஐ. அதிகாரிகள் புதன்கிழமையே சென்னை வந்து முகாமிட்டிருந்தனர். தமிழகத்தில் உள்ள சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபடவில்லை. சில கீழ்நிலை அதிகாரிகள் மட்டும் தில்லி அதிகாரிகளுக்குத் துணையாக சோதனை நடந்த இடத்துக்கு வந்தனர்.
தேனாம்பேட்டை செனடாப் சாலையில் உள்ள மு.க.ஸ்டாலின் வீட்டில் சோதனை நடைபெற்றதே முதலில் தெரியவந்தது. அதேபோல மேலும் 17 இடங்களில் சோதனை நடைபெறுவது வெகுநேரம் கழித்தே தெரிந்தது.
தியாகராய நகர் திருமூர்த்தி நகரில் உள்ள ஸ்டாலின் நண்பர் ராஜாசங்கர் வீடு, சென்னையில் பொழுதுபோக்கு பூங்கா நடத்தும் நிறுவனமான எம்.ஜி.எம். நிறுவனம், போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவ பல்கலைக்கழக வேந்தர் வெங்கடாசலம், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் என்.சீனிவாசன், ஆழ்வார்பேட்டை ராம் செட்டி, ஜான்சி ஆகியோரின் வீடு, அலுவலகம், நிறுவனம் உள்ளிட்ட 17 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
முதல் தகவல் அறிக்கையில் இவர்கள் பெயர்கள் இல்லாத நிலையில், வரி ஏய்ப்பு செய்த அலெக்ஸ் ஜோசப் மீதான குற்றத்தை உறுதிப்படுத்துவதற்காக இவர்களின் வீடுகளிலும், அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டதாக சி.பி.ஐ. தரப்பில் கூறப்படுகிறது.
இவர்களிடம் இருந்த ரோல்ஸ் ராய்ஸ், பென்ஸ், பி.எம்.டபிள்யூ, லேண்ட் ரோவர், டொயோட்டா, மினி கூப்பர், பஜேரோ, ஜாகுவார் ஆகிய இறக்குமதி கார்களில் பறிமுதல் செய்யப்பட்டதற்கான நோட்டீûஸ சி.பி.ஐ. ஒட்டியுள்ளனர். மேலும் எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு வர வேண்டும் என சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனராம்.
ஜோசப் வரி ஏய்ப்பு செய்தது எப்படி?
கேரள மாநிலம் பத்தனம்திட்டாவைச் சேர்ந்த அலெக்ஸ் சி.ஜோசப் வெளிநாட்டு கார் இறக்குமதி மூலம் ரூ.500 கோடி வரை முறைகேடு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இது குறித்த விவரம்: கேரள மாநிலத்தவர்கள் வளைகுடா நாடுகளில் அதிகமாக இருப்பதைப் பயன்படுத்தி 15 ஆண்டுகளுக்கு முன்பு முதலில் சிறிய அளவில் கடத்தல் தொழிலில் ஜோசப் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது. பின்னர் அத் தொழிலில் படிப்படியாக வளர்ந்து அரசை ஏமாற்றி வெளிநாட்டு கார் இறக்குமதி செய்யும் தொழில் செய்யத் தொடங்கியுள்ளார்.
இதன் மூலம் அவருக்கு முக்கிய பிரமுகர்களின் தொடர்பு கிடைத்ததால், அத் தொழிலை எந்த பயமும் இன்றி செய்துள்ளார். இந்த முறைகேட்டுக்கு வெளிநாடுகளில் வாழ்ந்து இந்தியாவுக்கு இடம்பெயரும் நம் நாட்டினரைப் பயன்படுத்தியுள்ளார்.
வெளிநாடுகளில் வாழ்ந்து தாயகம் திரும்பும் இந்தியர்களுக்கு தாங்கள் பயன்படுத்திய பழைய காரை கொண்டு வருவதற்கு வரி விலக்கு உண்டு என்பதால், புதிய கார்களையே பழைய கார்கள் போல் செய்து இறக்குமதி செய்துள்ளார். வெளிநாடுகளில் இருந்து புதிய கார்களை இறக்குமதி செய்ய 100 சதவீத இறக்குமதி வரி, 30 சதவீத கலால் வரி, 20 சதவீத பதிவு கட்டணம் ஆகியவற்றை செலுத்த வேண்டும் என்பதால், இந்த குறுக்கு வழிமூலம் அந்த வரிகளை செலுத்தாமல் அரசுக்கு வரி ஏய்ப்பு செய்தார்.
கடந்த 13 ஆண்டுகளில் ஜோசப் 480 கார்களை இறக்குமதி செய்துள்ளதாக கூறப்படும் நிலையில், ஜோசப் சுமார் ரூ.500 கோடி வரை அரசுக்கு வரி ஏய்ப்பு செய்திருப்பதாக கேரள காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.