உயர்ந்தது ரயில் தட்கல் கட்டணம்
ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட முன்பதிவு டிக்கெட் ரத்து கட்டண உயர்வு மற்றும் தட்கல் டிக்கெட்டுக்கான புதிய
ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட முன்பதிவு டிக்கெட் ரத்து கட்டண உயர்வு மற்றும் தட்கல் டிக்கெட்டுக்கான புதிய கட்டண விதிமுறைகள் திங்கள்கிழமை அமலுக்கு வந்தன.
2013-2014ம் ஆண்டுக்கான மத்திய ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டவாறு, முன்பதிவை ரத்து செய்யும் கட்டணம், அதிவிரைவு ரெயில்களுக்கான முன்பதிவுக் கட்டணம், ஏ.சி. வகுப்புக் கட்டணம், தட்கல் கட்டணம் போன்றவை திங்கள்கிழமை முதல் உயர்ந்துள்ளன. 2-ம் வகுப்பு ஏ.சி. முன்பதிவுக் கட்டணம் ரூ.15 முதல் 25 வரை உயர்ந்துள்ளது. அதிவிரைவு ரயில்களில் தூங்கும் வசதிகொண்ட பெட்டிகளில் ரூ.10 வரை கட்டணம் அதிகரித்துள்ளது. மேலும் ஏ.சி. பெட்டிகளுக்கான கட்டணம் ரூ.15 முதல் ரூ.25 வரை உயர்த்தப்பட்டு நடைமுறைக்கு வந்தது.
அதேபோல 2-ம் வகுப்பு தட்கல் கட்டணம், அடிப்படை பயணக் கட்டணத்தில் இருந்து 10 சதவீதம் அதிகரித்துள்ளது. ஏ.சி.பெட்டிகளில் இந்தக் கட்டணம் 30 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனையடுத்து திங்கள்கிழமை காலை எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு முன்பதிவை ரத்து செய்ய வந்த பயணிகள் கூடுதல் கட்டணத்தைச் செலுத்தினர். மேலும் தட்கல் டிக்கெட் எடுக்க வந்தவர்கள் அடிப்படைக் கட்டணத்தில் இருந்து 10 சதவீதம் அதிகரித்திருப்பது கூடுதல் சுமையாக இருப்பதாகவும், கட்டண அதிகரிப்பை குறைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
Advertisement
Advertisement
சீசன் டிக்கெட்: ரயில்களில் சீசன் டிக்கெட்டுகளை ஒரு ஆண்டு வரை வழங்கும் திட்டம், திங்கள்கிழமை செயல்பாட்டுக்கு வந்தது. ரயில்களில் பயணம் செய்வதற்கு, இதுவரை ஒரு மாதம் மற்றும் மூன்று மாதங்களுக்கு மட்டுமே சீசன் டிக்கெட் வழங்கப்பட்டு வந்தது. திங்கள்கிழமை முதல் ஆறு மாதங்கள் மற்றும் ஒரு ஆண்டு வரை சீசன் டிக்கெட் வாங்கிக் கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதுபோல், இரண்டாம் வகுப்பு மற்றும் முதல் வகுப்பில் பயணம் செய்பவர்களுக்கு சீசன் டிக்கெட் வழங்கப்படும். ரயில்களில் மாணவர்களுக்கான ஒரு மாதம் மற்றும் 3 மாதங்களுக்கான சீசன் டிக்கெட் பழைய நடைமுறையிலேயே வழங்கப்படும். ரயில் பயணம் செய்வதற்கு, "இசாட்' வசதியில் வழங்கப்படும் மாதாந்திர சீசன் டிக்கெட் மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச ஒரு மாத சீசன் டிக்கெட் வசதியில், எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.