முகப்பு
தமிழ்நாடு

ஜீப் மரத்தில் மோதி விபத்து: கோயில் உதவி ஆணையர் சாவு

திருவண்ணாமலை அருகே அரசு ஜீப் மரத்தில் மோதிய விபத்தில், மேல்மலையனூர் ஸ்ரீஅங்காளம்மன் கோயில் உதவி ஆணையர் இறந்தார்.

Updated On : 12 ஏப்ரல், 2013 at 3:02 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:08 PM

திருவண்ணாமலை அருகே அரசு ஜீப் மரத்தில் மோதிய விபத்தில், மேல்மலையனூர் ஸ்ரீஅங்காளம்மன் கோயில் உதவி ஆணையர் இறந்தார்.

திருவண்ணாமலை, வேங்கிக்கால், தென்றல் நகரைச் சேர்ந்தவர் மு.ஜோதி (53). விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் ஸ்ரீஅங்காளம்மன் கோயில் உதவி ஆணையராகப் பணிபுரிந்து வந்தார். இக்கோயிலில் நடைபெறும் பிரசித்தி பெற்ற அமாவாசை ஊஞ்சல் உற்சவம் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 9) நடைபெற்றது.

இம்முறை செவ்வாய், புதன்கிழமைகளில் அமாவாசை வந்ததால், இரு நாள்களும் இரவு, பகலாக பல ஆயிரம் பக்தர்கள் கோயிலுக்கு வந்தனர். இரு நாள்களாக கோயில் பணியில் ஈடுபட்டிருந்த அவர், வியாழக்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு கோயிலில் இருந்து திருவண்ணாமலைக்கு ஜீப்பில் புறப்பட்டுள்ளார்.

Advertisement

ஜீப் ஓட்டுநர் தாற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால், எலக்ட்ரீஷியன் ஒருவரின் உதவியுடன் அவலூர்பேட்டை வரை வந்துள்ளார். பின்னர், எலக்ட்ரீஷியனை இறக்கிவிட்டு விட்டு ஜோதி, தானே ஜீப்பை ஓட்டி வந்துள்ளார்.

மங்கலம் அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக சாலையோர புளிய மரத்தில் ஜீப் மோதியதாம். இடிபாடுகளில் சிக்கிய ஜோதி, அதே இடத்தில் இறந்தார்.

தகவலறிந்த மங்கலம் போலீஸார் சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்த ஜோதி, கடந்த இரண்டரை ஆண்டுகளாக மேல்மலையனூர் கோயில் உதவி ஆணையராகப் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு மனைவி சாந்தி, மகன் அருண்குமார், மகள் சுபா ஆகியோர் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.