முகப்பு
தமிழ்நாடு

இழந்த பலத்தை மீட்கவே சாதி கலவரத்தை தூண்டுகிறது பாமக: ஜி.ராமகிருஷ்ணன்

இழந்த பலத்தை மீட்கவே சாதி கலவரத்தை பாட்டாளி மக்கள் கட்சி தூண்டுகிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Updated On : 2 மே, 2013 at 4:08 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:09 PM

இழந்த பலத்தை மீட்கவே சாதி கலவரத்தை பாட்டாளி மக்கள் கட்சி தூண்டுகிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது குறித்து கோவையில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை அவர் கூறியது:

நிலக்கரி ஊழல் தொடர்பாக சிபிஐயின் விசாரணை அறிக்கையை மத்திய அமைச்சருடன் பகிர்ந்து கொண்டது தவறானது. இதற்கு பொறுப்பேற்று மத்திய சட்டத்துறை அமைச்சர் அஸ்வனி குமார் பதவி விலக வேண்டும்.

Advertisement

இது குறித்து பிரதமர் மன்மோகன் சிங் விளக்கம் அளிக்க வேண்டும். இதற்கு எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்காமல் சுதந்திரமாக நடத்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இல்லையென்றால் இப்பிரச்னை மத்திய அரசுக்கு சாதகமாக அமைந்துவிடும்.

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் பாமக சார்பில் நடைபெற்ற சித்திரைத் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக சென்ற அக்கட்சியினர், மரக்காணத்தில் உள்ள தலித்துகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் பாலகிருஷ்ணன், ராமமூர்த்தி, பீமா ராவ் ஆகியோர் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர். அவர்களை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தரக்குறைவாக பேசியுள்ளது கண்டனத்துக்குரியது.

கடந்த 2012-ம் நடைபெற்ற சித்திரைத் திருவிழாவின் போதும் சமுதாய நல்லிணக்கம் பாதிக்கப்படும் வகையில் காடுவெட்டி குரு பேசியுள்ளார்.

இதைத் தொடர்ந்தே தருமபுரி மோதல் சம்பவம் நடைபெற்றது. இந்த ஆண்டு நடைபெற்ற சித்திரைத் திருவிழாவையொட்டியும் மோதல் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் மக்களிடையே சாதி கலவரத்தை பாமகவினர் திட்டமிட்டே அரங்கேற்றி வருகின்றனர். இழந்த பலத்தை மீட்கவே சாதி கலவரத்தை பாமகவினர் தூண்டி வருகின்றனர்.

இது தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது முதல்வர் வெளியிட்ட அறிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது.

சமூக நீதியைக் காக்கவும், சமுதாய நல்லிணக்கத்தைப் பாதுகாக்கவும் பாமக தங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும். சாதி ரீதியான அரசியலை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அதைக் கொண்டு தேர்தல் முடிவுகளும் அமையாது.

தமிழகத்தில் நிலவி வரும் சாதி மோதலைக் கண்டித்து மே 8-ம் தேதி இடதுசாரி கட்சிகள் சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றார்.

முன்னதாக மே தினத்தையொட்டி கோவை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் ஜி.ராமகிருஷ்ணன் கொடியேற்றினார். இதில், மாவட்டச் செயலாளர் ராமமூர்த்தி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.சி.கருணாகரன், யு.கே.வெள்ளியங்கிரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.