நெல்லை- தாதர் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடக்கம்
திருநெல்வேலி-மும்பை தாதர் இடையே வாராந்திர அதிவிரைவு ரயில் சேவை புதன்கிழமை தொடங்கியது. 2012-ம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்த இந்த ரயில் சேவை குறித்து பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
திருநெல்வேலி-மும்பை தாதர் இடையே வாராந்திர அதிவிரைவு ரயில் சேவை புதன்கிழமை தொடங்கியது. 2012-ம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்த இந்த ரயில் சேவை குறித்து பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
திருநெல்வேலி-தாதர் இடையே 22630, 22629 என்ற எண்ணுள்ள வாராந்திர அதிவிரைவு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே சில வாரங்களுக்கு முன் அறிவித்தது.
இந்த ரயில் திருநெல்வேலியிருந்து ஒவ்வொரு புதன்கிழமையும் காலை 7.10 மணிக்குப் புறப்பட்டு கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுகல், கரூர், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, சொர்னூர், கோழிக்கோடு, கண்ணூர், மங்களுர், உடுப்பி, கொன்னாவார், கார்வார், மடோகான் (கோவா), ரெத்தினகிரி, பான்வேல் வழியாக வியாழக்கிழமை பகல் 3.10 மணிக்கு தாதர் சென்றடையும்.
Advertisement
மறுமார்க்கமாக தாதரிலிருந்து ஒவ்வொரு வெள்ளிகிழமை இரவு 8.40 மணிக்குப்
புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் 4 மணிக்கு திருநெல்வேலி வந்தடையும். இந்த ரயிலின் மொத்த பயண நேரம் 33 மணியாகும். குளிர்சாதன இரண்டு அடுக்கு பெட்டிகள் ஒன்றும், குளிர்சாதன 3 அடுக்கு பெட்டிகள் ஒன்றும், 2-ம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள் ஆறும், முன்பதிவு செய்யாத பெட்டிகள் 6-ம், ஊனமுற்றோருக்கான பெட்டிகள் 2 என்று மொத்தம் இந்த ரயிலில் 16 பெட்டிகள் உள்ளன. இந்த ரயிலின் முழு கட்டுப்பாடும் மதுரை கோட்டத்திடமும், இதன் முதன்மையான பராமரிப்பு திருநெல்வேலி ரயில் நிலையத்திலும் செய்யப்பட இருக்கிறது.
இந்த ரயில் பயணம் செய்வதற்கான முன்பதிவு கடந்த 25-ம் தேதி தொடங்கியது. முதல் நாளிலேயே இந்த ரயிலுக்கு பயணிகளிடையே மிகுந்த வரவேற்பு காணப்பட்டது.
இந்த ரயில் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து தனது முதல் பயணத்தை புதன்கிழமை தொடங்கியது. தொடக்க நிகழ்ச்சியில் திருநெல்வேலி மக்களவை உறுப்பினர் எஸ்.எஸ்.ராமசுப்பு, ரயில் நிலைய மேலாளர் செல்லத்துரை உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற ராமசுப்பு எம்.பி. செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து மும்பைக்கு இடம்பெயர்ந்து வசிப்போருக்கு இந்த ரயில் மிகுந்த உதவியாக இருக்கும். திருநெல்வேலியிலிருந்து மும்பைக்கு குறைந்த நேரத்தில் இந்த ரயில் இயக்கப்படுவது சிறப்பம்சமாகும். கோவாவுக்கு இந்த ரயிலில் சுற்றுலா செல்லவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.
வாரம் இருமுறை வேண்டும்: இந்த ரயில் பகல் நேரத்தில் பயணிக்க வசதியாக இயக்கப்படுவது குறித்து கோவையைச் சேர்ந்த வர்த்தகர் கே.சதீஷ் மகிழ்ச்சி தெரிவித்தார். மும்பையிலிருந்து திருநெல்வேலிக்கு வந்து செல்வதற்கு இந்த ரயில் மிகுந்த உதவிகரமாக இருக்கிறது என்பதால் இதை வாரம் இருமுறை வந்து செல்லும் ரயிலாக இயக்க வேண்டும் என்றும் சில பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.