பெரம்பலூர் அருகே கார் கவிழ்ந்து திமுக முன்னாள் எம்எல்ஏ மகன் உள்பட 4 பேர் சாவு
பெரம்பலூர் அருகே சனிக்கிழமை அதிகாலை பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் திமுக முன்னாள் எம்எல்ஏ ராமஜெயம் மகன் உள்பட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 4 பேர் பலத்த காயமடைந்தனர்.
பெரம்பலூர் அருகே சனிக்கிழமை அதிகாலை பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் திமுக முன்னாள் எம்எல்ஏ ராமஜெயம் மகன் உள்பட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 4 பேர் பலத்த காயமடைந்தனர்.
தென் சென்னை ஆர்.ஏ. புரம் பகுதியைச் சேர்ந்த திமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ராமஜெயம் மகன் செந்தில் (35), தனது குடும்பத்தினர், உறவினர்களுடன், திருச்செந்தூர், பழனி முருகன் கோயிலுக்குச் சென்றுவிட்டு சென்னைக்கு காரில் வந்துகொண்டிருந்தார்.
காரை, செந்தில் உறவினரான விழுப்புரம் மாவட்டம், ஏமாப்பூர் பகுதியைச் சேர்ந்த சீதாராமன் மகன் தலைமைக் காவலர் ரமேஷ் (38) ஓட்டி வந்தார்.
Advertisement
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விஜயகோபாலபுரம் அருகேயுள்ள தனியார் டயர் தொழிற்சாலை பகுதியில் கார் வந்தபோது, சாலையோரத்தில் இருந்த தடுப்புச் சுவற்றில் மோதி அருகிலிருந்த பள்ளத்தில் கார் கவிழ்ந்தது.
இதில், காரில் பயணம் செய்த ராமஜெயம் மகன் செந்தில், அவரது உறவினர்களான சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த லோகநாதன் (45), இவரது மனைவி ரேணுலட்சுமி (40), ரமேஷ் (38) ஆகிய நான்கு பேரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், இந்த விபத்தில் உயிரிழந்த ரமேஷ் மனைவி ஆனந்தி, செந்தில் மனைவி கவிதா (30), லோகநாதன் மகன் தருண்பிரகாஷ் (11), கார் ஓட்டுநர் சீனிவாசன் ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
இதுகுறித்து பாடாலூர் காவல் நிலைய ஆய்வாளர் ரெத்தினசாமி வழக்குப் பதிந்து விசாரிக்கிறார்.
கார் ஓட்டுநரான சீனிவாசன் சென்னையிலிருந்து வெள்ளிக்கிழமை இரவு வரை தொடர்ந்து கார் ஓட்டியதால் அவருக்கு அசதி ஏற்பட்டதாகவும், வரும் வழியில் தலைமைக் காவலர் ரமேஷ் காரை ஓட்டி வந்ததாகவும், திடீரென அவர் அசந்ததால் இந்த விபத்து நிகழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.