சிறுநீரக விற்பனை வழக்கு: சிபிசிஐடி வசம் ஒப்படைப்பு
தருமபுரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக சிறுநீரக விற்பனையில் ஈடுபட்டதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது.
தருமபுரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக சிறுநீரக விற்பனையில் ஈடுபட்டதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது.
தருமபுரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக சிறுநீரக விற்பனையில் ஈடுபட்டதாக, சேலம் மாவட்டம், சங்ககிரியைச் சேர்ந்த இடைத்தரகர் அய்யாவு (51), கத்தேரி கிராமத்தைச் சேர்ந்த பி.வடிவேல் (46), தருமபுரி மாவட்டம், மணியம்பாடியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் (40), நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், பெரியமணலியைச் சேர்ந்த சீனிவாசன் (35), குமாரபாளையத்தைச் சேர்ந்த என்.ஷாஜகான் (45), பள்ளிபாளையத்தைச் சேர்ந்த வேலுமணி (எ) சித்ரா (34), ஈரோடு மாவட்டம், மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள டி.ஜி.புதூரைச் சேர்ந்த சிகாமணி (53), மருத்துவர் கணேசன், சேலம் நீதிமன்றத்தில் ஆஜரான கார் ஓட்டுநர் ஹரி பாஸ்கர் (35) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கை தருமபுரி மாவட்டக் குற்றப் பிரிவு போலீஸார் விசாரித்து வந்தனர். இந்த நிலையில், வழக்கை சிபிசிஐடி வசம் ஒப்படைக்குமாறு தமிழகக் காவல் துறை இயக்குநர் அலுவலகத்தில் இருந்து தருமபுரி மாவட்டக் காவல் துறைக்கு உத்தரவு வந்துள்ளது.
Advertisement
Advertisement
அதன்படி, வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் சிபிசிஐடி போலீஸார் வசம் ஒப்படைக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆஸ்ரா கர்க் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மருத்துவர் கணேசனை போலீஸார் தங்களது காவலில் எடுத்து விசாரித்த பிறகு, வியாழக்கிழமையே பென்னாகரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர்.
ஜாமீன் மனு: மருத்துவரின் ஜாமீன் மனு மீதான விசாரணை வெள்ளிக்கிழமை எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, மருத்துவர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர்கள் இந்த வழக்கில் மருத்துவர் கணேசனுக்கு நேரடித் தொடர்பு ஏதுமில்லை. எனவே, அவரை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் எனக் கோரினர். இதற்கு அரசுத் தரப்பு வழக்குரைஞர் எதிர்ப்புத் தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஸ்ரீராம், ஜாமீன் மனு மீது திங்கள்கிழமை உத்தரவிடுவதாகக் கூறி மனுவை ஒத்திவைத்தார்.