திறக்கப்படாத பள்ளிக் கட்டடம் சமூகவிரோதிகளின் கூடாரமானது!
திருக்கோவிலூர் அருகே, கட்டி முடித்து 3 ஆண்டுகளாகியும் திறக்கப்படாத பள்ளியின் கூடுதல் கட்டடம், விரிசல் விழுந்து வீணாகி வருகிறது. இப்பள்ளியின் சமையலறைக் கூடமோ, சமூக விரோதிகளின் கூடாரமாகி விட்டது.
திருக்கோவிலூர் அருகே, கட்டி முடித்து 3 ஆண்டுகளாகியும் திறக்கப்படாத பள்ளியின் கூடுதல் கட்டடம், விரிசல் விழுந்து வீணாகி வருகிறது. இப்பள்ளியின் சமையலறைக் கூடமோ, சமூக விரோதிகளின் கூடாரமாகி விட்டது.
திருக்கோவிலூரை அடுத்த நூரோலை கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு போதிய கட்டட வசதியின்றி மாணவர்கள் தவிக்கின்றனர்.
இதையடுத்து, கடந்த 2008-09-ஆம் ஆண்டு, அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் சுமார் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் 3 வகுப்பறைக் கட்டடம் மற்றும் சமையலறைக் கூடம் புதிதாகக் கட்டப்பட்டது.
Advertisement
பணிகள் அனைத்தும் முடிந்து 3 ஆண்டுகளாகியும், இக்கட்டடத்தை பயன்பாட்டுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், பள்ளியில் போதிய இடவசதியின்றி மாணவர்கள் மரத்தடியிலும், கட்டாந்தரையிலும் கல்வி பயில்கின்றனர். கட்டியும் திறக்கப்படாத புதிய கட்டடத்தில், தற்போது அதிகளவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. திறந்த நிலையில் காணப்படும் சமையல் கூடம், சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. குறிப்பாக, மதுப்பிரியர்கள், மதுபானங்களை குடித்து விட்டு, பாட்டல்களை வீசியெறிந்து செல்கின்றனர்.
3 ஆண்டுகளாக திறக்கப்படாததாலேயே பள்ளிக்கட்டடம் விரிசல் விழுந்து வீணாகியும், சமூக விரோதச் செயல்கள் அரங்கேறியும் வருவது, கல்வி ஆர்வலர்களை வேதனையடையச் செய்துள்ளது. எந்த நோக்கத்துக்காக நிதி ஒதுக்கி, இந்த பள்ளிக் கட்டடம் கட்டப்பட்டதோ, அந்த நோக்கமே தற்போது வரை நிறைவேறவில்லை.
எனவே, பள்ளிக் கட்டடத்தில் விரிசல் விழுந்த பகுதியை செப்பனிட்டு உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இனியாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.