முகப்பு
தமிழ்நாடு

மாநிலங்களவைத் தேர்தல்: பாமக புறக்கணிப்பு

தமிழகத்தில் மாநிலங்களவைத் தேர்தலை புறக்கணிக்க பாட்டாளி மக்கள் கட்சி முடிவு செய்துள்ளது.

Updated On : 22 ஜூன் 2013, 4:57 am IST
பகிர்:

தமிழகத்தில் மாநிலங்களவைத் தேர்தலை புறக்கணிக்க பாட்டாளி மக்கள் கட்சி முடிவு செய்துள்ளது.

தமிழக சட்டப் பேரவையில் பா.ம.க.வுக்கு 3 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் கனிமொழிக்கு பா.ம.க. ஆதரவு தெரிவிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்த நிலையில், தி.மு.க.வுக்கு அதிர்ச்சி அளிக்கும் முடிவை பா.ம.க. எடுத்துள்ளது.

சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பா.ம.க. தலைமை செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றபட்டது. கூட்டத்துக்கு பாமக இளைஞர் அணிச் செயலாளர் அன்புமணி ராமதாஸ் தலைமை வகித்தார்.

Advertisement

Advertisement

இந்தக் கூட்டத்தில் மாநிலங்களவைத் தேர்தலில் எந்தக் கட்சியையும் ஆதரிக்காமல் புறக்கணிப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டது.

புறக்கணிப்பு முடிவு ஏன்? கடந்த 2011 ஜூன் 27-ல் நடைபெற்ற பாமகவின் பொதுக்குழுவில் திராவிடக் கட்சிகளுடனோ அல்லது தேசிய கட்சிகளுடனோ கூட்டணி அமைப்பது இல்லை என்று முடிவு எடுக்கப்பட்டது.

இந்நிலையில், மாநிலங்களவைத் தேர்தலில் தங்களுக்கு ஆதரவு அளிக்கும்படி போட்டியிடும் சில கட்சிகள் பாமகவிடம் கோரிக்கை விடுத்தன. ஆனால், தனித்துப் போட்டியிடும் முடிவில் உறுதியாக இருக்கும்படி பாமக நிர்வாகக் குழு கூட்டத்தில் நிர்வாகிகள் வலியுறுத்தினர். அதே உணர்வே செயற்குழு கூட்டத்திலும் வெளிப்பட்டது.

அதன்படி, மாநிலங்களவைத் தேர்தலில் எந்தக் கட்சியையும் ஆதரிப்பதில்லை என்றும், தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாகவும் செயற்குழு கூட்டத்தில் ஒரு மனதாக முடிவெடுக்கப்படுகிறது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.