முகப்பு
தமிழ்நாடு

இன்று பந்த்: இந்து முன்னணி அழைப்பு

இந்து முன்னணி மாநிலச் செயலர் சு.வெள்ளையப்பன் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து,

Updated On : 2 ஜூலை, 2013 at 2:48 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:14 PM

இந்து முன்னணி மாநிலச் செயலர் சு.வெள்ளையப்பன் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, செவ்வாய்க்கிழமை (ஜூலை 2) மாநிலம் தழுவிய வேலைநிறுத்தத்துக்கு இந்து முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பாக இந்து முன்னணி மாநில அமைப்பாளர் முருகானந்தம் சென்னையில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

வேலூரில் இந்து முன்னணி மாநிலச் செயலாளர் சு.வெள்ளையப்பன் திங்கள்கிழமை மதியம் 2.30 மணிக்கு அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்தப் படுகொலை பட்டப்பகலில் நடந்துள்ளது. இது மிகவும் கண்டனத்துக்குரியது.

Advertisement

இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்புகளைச் சார்ந்த பிரமுகர்கள் படுகொலை செய்யப்படுவது அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது.

கோவை மாவட்டம் குறிச்சி, மேட்டுப்பாளையம், குன்னூர், நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் இந்து முன்னணிப் பிரமுகர்கள் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது.

ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்து அமைப்புகளைச் சார்ந்தவர்கள் குறிவைத்துத் தாக்கப்படுகின்றனர். சென்னையிலும் இது போன்ற முயற்சிகள் நடைபெற்றுள்ளன.

இது போன்ற தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிப்பதுடன், அரசு இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும்.

இது போன்ற பயங்கர சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது தமிழக அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை. சு.வெள்ளையப்பன் படுகொலையைக் கண்டித்து, இந்து முன்னணி சார்பில் மாநிலம் தழுவிய அளவில் வேலைநிறுத்தம், கடையடைப்பு போராட்டம் நடைபெறும். சென்னையில் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றார்.

பேட்டியின் போது, சென்னை மாநகர தலைவர் மனோகர், பொதுச்செயலாளர் இளங்கோ உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.