என்எல்சி பங்கை தமிழக அரசு வாங்குவது ஏற்புடையதல்ல: ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்டச் செயலர்
நெய்வேலி நிலக்கரி நிறுவன பங்குகளை தனியாருக்கு விற்கக்கூடாது, வேண்டும் என்றால் மாநில
நெய்வேலி நிலக்கரி நிறுவன பங்குகளை தனியாருக்கு விற்கக்கூடாது, வேண்டும் என்றால் மாநில அரசின் பொதுத் துறை நிறுவனங்களே வாங்கிக் கொள்ளும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளது தொழிற்சங்கங்களை பொறுத்தவரையில் ஏற்புடையதல்ல என ஏ.ஐ.டி.யூ.சி. கடலூர் மாவட்டச் செயலர் எம்.சேகர் கூறினார்.
இது குறித்து திங்கள்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது: நெய்வேலி நிறுவன பங்கை தனியாருக்கு விற்கக்கூடாது, மாநில அரசே வாங்கிக் கொள்ளும் என்ற முதல்வரின் ஆலோசனை தொழிற்சங்கங்களின் மத்தியில் ஏற்புடையதல்ல.
தமிழகத்தில் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள் ஏற்கெனவே நலிவடைந்து இருக்கிறது. இவை எல்லாம் முன்னர் தனியாரிடம்தான் இருந்தன. அரசு வசம் இல்லை. அண்மையில் தமிழக அரசு தமிழ்நாடு மின்சார வாரியம் உள்ளிட்டவைகளின் பெரும்பாலான பங்குகளை தனியாரிடம் விற்றுவிட்டது.
Advertisement
இந்த சூழலில் நெய்வேலியின் 5 சதவீத பங்குகள் தமிழக அரசின் பொதுத் துறை நிறுவனங்களுக்கு செல்லுமானால், அவை பொதுத்துறை நிறுவனத்திடமே இருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. எனவே தமிழக முதல்வர் ஏற்கெனவே அறிவித்தவாறு என்.எல்.சி. பங்குகளை 1 சதவீதம்கூட அரசு நிறுவனங்களுக்கோ, தனியாருக்கோ விற்பனை செய்யக்கூடாது என்ற நிலை எடுப்பதுதான் பொருத்தமாக இருக்கும்.
அந்த அடிப்படையில் ஏ.ஐ.டி.யு.சி போன்ற தொழிற்சங்கங்கள் மத்திய அரசின் பேராதிக்கத்தில் இருந்து 1 சதவீத பங்குகளைகூட விற்பதோ அல்லது மாற்றுவதோ கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
பங்கு விற்பனையை கைவிடும் வரையில் தொடர்ந்து போராடுவோம் என்றார்.