முகப்பு
தமிழ்நாடு

கீழணை பாலம் விரிசல்: சென்னை-கும்பகோணம் போக்குவரத்து நிறுத்தம்

காட்டுமன்னார்கோவில் அருகே அணைக்கரையில் உள்ள 177 ஆண்டுகள் பழமைவாய்ந்த கீழணை

Updated On : 2 ஜூலை, 2013 at 2:43 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:14 PM

காட்டுமன்னார்கோவில் அருகே அணைக்கரையில் உள்ள 177 ஆண்டுகள் பழமைவாய்ந்த கீழணை பாலத்தில் விரிசல் ஏற்பட்டதால் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

÷177 ஆண்டுகளை கடந்த பழமையும், பெருமையும் பெற்ற தஞ்சை மாவட்டம், அணைக்கரையில் உள்ள கீழணையை பிரிட்டிஷ் பொறியாளர் சர் ஆர்தர் காட்டன் நிறுவினார்.

÷இந்த கீழணை பாலத்தின் 16, 17 மதகுகள் விரிசல் விட்டதால் ஞாயிற்றுக்கிழமை இரவு பாலத்தில் போக்குவரத்து இயக்கம் நிறுத்தப்பட்டது. மேலும் அரியலூர், நாகை, தஞ்சை, கடலூர் மாவட்டங்களை இணைக்கும் முக்கிய பாலமாக இது அமைந்துள்ளது. இந்நிலையில் பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் மேற்கண்ட 4 மாவட்ட மக்களுக்கும் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

÷இது குறித்து உழவர் சங்க கூட்டமைப்பு தலைவர் பி.ரவீந்திரன் தெரிவித்தது: தமிழக அரசு உத்தரவின் பேரில் பலமிழந்த கீழணை பாலத்தை 2002-ம் ஆண்டு அப்போதிருந்த தமிழ்நாடு பொதுப்பணித்துறை ஆலோசகர் மோகனகிருஷ்ணன் ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளித்தார்.

÷அந்த அறிக்கையில் கீழணை பாலம் வாகனங்கள் இயக்க தகுதியற்றது என தெரிவித்துள்ளார். அதன் பின்னர் பஸ்களை மட்டும் இயக்குவது என அரசு அறிவித்தது.

÷ஆனால் பஸ்கள் மட்டுமல்லாமல் மணல், ஜல்லி மற்றும் 36 முதல் 40 டன் கொண்ட லாரிகள் வரை இயக்கப்பட்டன. இதனால் பாலம் பலமிழந்தது. அதன் பின்னர் ரூ.6 கோடி செலவில் பாலம் சீரமைத்து பலப்படுத்தப்பட்டது. பின்னர் பஸ்கள் மட்டும் இயக்குவது என முடிவு எடுக்கப்பட்டது.

÷ஆனால் காவல்துறை மற்றும் பொதுப்பணித் துறையினரின் அலட்சிய போக்கால் அனைத்து கனரக வாகனங்களும் பாலத்தில் இயக்கப்பட்டதால் மீண்டும் தற்போது பாலத்தில் விரிசல் ஏற்பட்டு அபாய கட்டத்தை எட்டியுள்ளது.

÷மேலும் இதற்கு மாற்றாக கீழபள்ளூர் - மதனத்தூர் இடையே ரூ.26 கோடி செலவில் கொள்ளிடத்தில் பாலம் அமைக்க அரசு முடிவு செய்து நிலுவையில் உள்ளது.

÷காட்டுமன்னார்கோவில் அருகே ரூ.33 கோடி செலவில் முட்டம் - மணல்மேடு இடையே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பாலம் பணி முடிவுற்று திறக்கப்பட்டால் சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு மாற்றாக இருக்கும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.