அரசு மருத்துவமனைகளில் நவீன மருத்துவ வசதிகளுக்காக ரூ.43 கோடி நிதி ஒதுக்கீடு
அரசு மருத்துவமனைகளில் நவீன மருத்துவ வசதிகள், கருவிகள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஆகியவற்றுக்காக ரூ.43.39 கோடி நிதி ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
அரசு மருத்துவமனைகளில் நவீன மருத்துவ வசதிகள், கருவிகள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஆகியவற்றுக்காக ரூ.43.39 கோடி நிதி ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் சுகாதார பாதுகாப்பினை அளிக்கும் வகையில் அரசு மருத்துவமனைகளுக்கு கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், மருத்துவர்கள், மருத்துவர் சார்ந்த மற்றும் மருத்துவம் சாராத பணியாளர்களை நியமித்தல், எளிதில் அணுக முடியாத பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அவர்களின் வீடுகளுக்கு அருகிலேயே தரம் வாய்ந்த மருத்துவ வசதி கிடைக்க வழிவகை செய்தல், தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்தி உயர்தர மருத்துவ வசதிகளை அளித்தல் போன்ற சீரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
Advertisement
அந்த வகையில், 55 ஒருங்கிணைந்த அவசர பேறுகால மற்றும் சிசு பராமரிப்பு நிலையங்களுக்கு வருகை தரும் நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை அளிக்கும் வகையிலும், தாய் சேய் நலம் காக்கும் பொருட்டும், நவீன அறுவை சிகிச்சை கருவிகள், நவீன பிரசவ கட்டில்கள், சிறப்பு விளக்குகள் உள்ளிட்ட நவீன மருத்துவ வசதிகளுக்காக ரூ.18.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு தங்கு தடையின்றி உரிய தரமான நவீன மருத்துவ சிகிச்சை வழங்கும் வகையில் தேவையான கருவிகள் வாங்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி சென்னை கீழ்ப்பாக்கம், ஸ்டான்லி, செங்கல்பட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ரூ.1.58 கோடி செலவில் நவீன எக்ஸ்ரே கருவிகள் வாங்கவும், சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு ரூ.3.20 கோடி செலவில் பல்வேறு நவீன அறுவைச் சிகிச்சை கருவிகள் வாங்கவும், சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.17 லட்சம் செலவில் லாப்ரோஸ்கோப் கருவிகள் வாங்கவும், எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் ரூ.5.05 கோடி செலவில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வாங்குவதற்கும் ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
116 ஆம்புலன்ஸ் வாகனங்கள்: அபாயக் கட்டத்தில் உள்ள நோயாளிகளை விரைவாக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று அவர்களின் உயிரைக் காப்பதற்காக 116 புதிய ஆம்புலன்ஸ் வாகனங்கள் வாங்க ரூ.15.19 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவுகளின் மூலம், நவீன மருத்துவ வசதிகள், கருவிகள் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கென ரூ.43.39 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார் முதல்வர் என்று தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.