இளவரசன் நண்பரிடம் போலீஸார் விசாரணை
தருமபுரியில் ரயில் தண்டவாளம் அருகே சடலமாகக் கிடந்த காதல் திருமணம் செய்த இளவரசனின் மரணம் குறித்து, ஆந்திரத்தில் உள்ள அவரது நண்பரிடம் தருமபுரி மாவட்ட போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
தருமபுரியில் ரயில் தண்டவாளம் அருகே சடலமாகக் கிடந்த காதல் திருமணம் செய்த இளவரசனின் மரணம் குறித்து, ஆந்திரத்தில் உள்ள அவரது நண்பரிடம் தருமபுரி மாவட்ட போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
மற்றொரு சமுதாயத்தைச் சேர்ந்த பெண்ணை காதல் திருமணம் செய்த இளைஞர் இளவரசன் தருமபுரி அரசு கலைக் கல்லூரி பின்புறம் உள்ள ரயில் தண்டவாளத்தின் அருகே கடந்த வியாழக்கிழமை சடலமாகக் கிடந்தார். இதுகுறித்து, அரூர் டி.எஸ்.பி. வி.சம்பத் தலைமையிலான மாவட்ட போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
இளவரசன் அடிபட்டு உயிரிழந்ததாகக் கருதப்படும் கோவை - லோக் மானிய திலக் விரைவு ரயிலின் ஓட்டுநர்களான மோகன்குமார், சுரேஷ்குமார் மற்றும் நண்பர் பாரதி பிரபு, உறவினர் அறிவழகன் ஆகியோரிடம் கடந்த சில நாள்களுக்கு முன்பு போலீஸார் விசாரித்தனர்.
Advertisement
டி.எஸ்.பி. சம்பத் தலைமையிலான போலீஸார், இளவரசனின் பெற்றோரிடம் விசாரணை செய்ய தருமபுரி மருத்துவமனைக்கு சென்றனர். ஆனால், டி.எஸ்.பி. சம்பத் தலைமையிலான விசாரணைக்கு ஒத்துழைக்க இளவரசனின் பெற்றோர் மறுத்துவிட்டனர்.
இந்த நிலையில், இளவரசன் உயிரிழப்புக்கு முன்பு, ஆந்திர மாநிலம், சித்தூரில் உள்ள நண்பருடன் சேர்ந்து பணிக்குச் செல்ல இருந்ததாக இளவரசனின் தந்தை இளங்கோ தெரிவித்திருந்தார். இதையடுத்து, சித்தூரில் வாகன ஓட்டுநராகப் பணியாற்றும் இளவரசனின் நண்பர் கார்த்திக் (30) என்பவரிடம் விசாரிக்க தருமபுரி மாவட்ட போலீஸார் ஆந்திரம் சென்றுள்ளனர். இளவரசன் - திவ்யா திருமணத்தை கார்த்திக் நடத்தி வைத்ததாகக் கூறப்படுகிறது.
அதேபோல, இளவரசன் மரணமடைந்த அன்று அவரது செல்போனில் தொடர்பு கொண்டவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவர்களிடமும் போலீஸார் விசாரணை செய்து வருவதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.