எம்.பி.பி.எஸ். இடம் கோரி வழக்கு: மாற்றுத் திறனாளிகளை பரிசோதிக்க டாக்டர்கள் குழு
எம்.பி.பி.எஸ். இடம் ஒதுக்கக் கோரி வழக்குத் தொடர்ந்துள்ள மாற்றுத் திறனாளிகள் 5 பேரின் ஊனத்தின் சதவீதம் குறித்து ஆராய்வதற்காக டாக்டர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.
எம்.பி.பி.எஸ். இடம் ஒதுக்கக் கோரி வழக்குத் தொடர்ந்துள்ள மாற்றுத் திறனாளிகள் 5 பேரின் ஊனத்தின் சதவீதம் குறித்து ஆராய்வதற்காக டாக்டர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திருவண்ணாமலை மாவட்டம் இஞ்சிமேடு கிராமத்தைச் சேர்ந்த டி.நளினி உள்ளிட்ட 5 மாற்றுத் திறனாளிகள் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். 12-ஆம் வகுப்பு தேர்ச்சியடைந்துள்ள நாங்கள் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒதுக்கீட்டின் கீழ் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர தகுதி பெற்றுள்ளோம். கடந்த ஜூன் மாதம் 18-ஆம் தேதி நடைபெற்ற கலந்தாய்வுக்கு நாங்கள் அழைக்கப்பட்டோம்.
ஏற்கெனவே எங்களின் ஊன சதவீதம் குறித்து எங்கள் மாவட்ட மருத்துவ போர்டைச் சேர்ந்த டாக்டர்கள் பரிசோதித்து சான்றிதழ் அளித்துள்ள நிலையில், கலந்தாய்வு நடைபெற்ற இடத்தில் வேறு டாக்டர்கள் குழுவினர் மீண்டும் பரிசோதனை செய்தனர்.
Advertisement
நிர்ணயிக்கப்பட்ட சதவீதத்தை விட மிகுதியான ஊனம் இருப்பதாகக் கூறி எங்களுக்கு எம்.பி.பி.எஸ். இடம் தர மறுத்து விட்டனர் என்று அந்த மனுக்களில் கூறியுள்ளனர்.
இந்த மனுக்கள் மீது செவ்வாயன்று விசாரணை நடத்திய நீதிபதி கே.கே.சசிதரன், மனுதாரர்களின் ஊன சதவீதம் குறித்து 3 பேர் கொண்ட புதிய டாக்டர்கள் குழுவினர் பரிசோதனை நடத்தி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். வழக்கின் விசாரணை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.