சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம்
சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவதில் மத்திய அரசு உறுதியாக இருக்கிறது என்று மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவதில் மத்திய அரசு உறுதியாக இருக்கிறது என்று மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
உத்தரகண்ட் வெள்ள மீட்புப் பணியின்போது நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த மதுரையைச் சேர்ந்த விமானி பிரவீண் வீட்டுக்கு புதன்கிழமை வந்த வாசன், அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பிரவீணின் தாய் மஞ்சுளா, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் வாசன் கூறியது:
சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான பணிகளை மத்திய அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இத் திட்டத்துக்கு எதிராக சிலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். தமிழக அரசே இத் திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்பதற்காக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.
Advertisement
இந்த வழக்கில் மத்திய அரசின் சார்பாக கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சகம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில், திட்டத்தை நிறைவேற்றுவதற்கான காரணங்கள், சாத்தியக் கூறுகளை உறுதிபட தெரிவித்துள்ளது. இத் திட்டத்தை நிறைவேற்றுவதில் மத்திய அரசு உறுதியாக இருக்கிறது.
தமிழக மீனவர்கள் பிரச்னை: தமிழக மீனவர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க இரு நாள்களுக்கு முன்பு இலங்கை மீனவ சங்கப் பிரதிநிதிகள், இலங்கை அதிகாரிகள், தமிழக மீனவ சங்கப் பிரதிநிதிகளை அழைத்து மத்திய அரசு பேச்சு நடத்தியது. இருதரப்பிலும் சுமுக நிலை ஏற்பட வேண்டும் என்ற விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான நல்ல முடிவு ஏற்படும் என நம்புகிறோம்.
கருத்து வேறுபாடு இல்லை: தமிழக இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் யுவராஜா உள்பட உங்களது ஆதரவாளர்கள் மீது கட்சித் தலைமை தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறதே, இது கட்சியிலிருந்து உங்களை ஒதுக்குவதாக நினைக்கிறீர்களா எனக் கேட்டதற்கு,
தமிழக காங்கிரûஸ பொருத்தவரை தலைவர்கள், தொண்டர்கள் அனைவரும் ஓரணியில் இருந்து வருகிறோம். வரும் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம் என்று பதில் அளித்தார்.
தமிழகத்தில் அண்மையில் நடந்த மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவை, காங்கிரஸ் ஏமாற்றிவிட்டதாகச் சொல்லப்படுகிறதே என்ற கேள்விக்குப் பதில் அளித்த வாசன், அது தவறான கருத்து என்றார்.
அழகிரி - வாசன் சந்திப்பு: விமானி பிரவீண் இல்லத்துக்கு வாசன் வருவதற்கு, சற்று முன்பு முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக தென்மண்டல அமைப்புச் செயலருமான மு.க.அழகிரி
பிரவீண் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அங்கிருந்து காரில் புறப்பட்டுச் சென்றபோது, எதிரே ஜி.கே.வாசன் காரில் வந்தார். இருவரும் இறங்கி பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டனர்.