தங்கத்தின் மீதான முதலீட்டுக்கு மாற்றாக புதிய திட்டங்கள்
தங்கத்தின் மீதான முதலீட்டுக்கு மாற்றாக கவர்ச்சிகரமான புதிய முதலீட்டுத் திட்டங்களை உருவாக்க வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் டி.சுப்பாராவ் கருத்து தெரிவித்தார்.
தங்கத்தின் மீதான முதலீட்டுக்கு மாற்றாக கவர்ச்சிகரமான புதிய முதலீட்டுத் திட்டங்களை உருவாக்க வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் டி.சுப்பாராவ் கருத்து தெரிவித்தார்.
ஆர்.வெங்கட்ராமன் நினைவு அறக்கட்டளை சொற்பொழிவு நிகழ்ச்சி சென்னையில் உள்ள "மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எகானாமிக்ஸ்' கல்வி நிறுவனத்தில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 1) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற சுப்பாராவ் பேசியதாவது:
நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்தும் அதே வேளையில், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. பணவீக்கத்தால் பெரிதும் பாதிக்கப்படுவது ஏழைகள்தான். காய்கனிகள் உள்பட அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வதால் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
Advertisement
Advertisement
ஏழைகளின் மீது பெரும் தாக்கத்தை உருவாக்கும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் கடமை ரிசர்வ் வங்கிக்கு உள்ளது.
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்தினால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைய வாய்ப்புள்ளது. இருப்பினும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தினால் வளர்ச்சி விகிதம் தானாக அதிகரிக்கக்கூடும்.
மொத்த வர்த்தக துறையில் இரண்டு இலக்கத்தில் இருந்த பணவீக்க விகிதம் தற்போது 5 சதவீதத்துக்கும் கீழ் குறைக்கப்பட்டுள்ளது. சில்லறை விற்பனையில் விநியோகப் பிரச்னைகள் உள்ளதால் அதில் உள்ள பணவீக்கம் இரட்டை இலக்கத்திலேயே நீடிக்கிறது.
இந்திய ரிசர்வ் வங்கி பணவீக்கத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறது என்ற கருத்து நிலவுகிறது. இதனை நான் ஒப்புக்கொள்ள முடியாது. ரிசர்வ் வங்கி, பொருளாதார வளர்ச்சி, நிதி நிலை மற்றும் விலைவாசிக் கட்டுப்பாடு என அனைத்திலும் கவனம் செலுத்தி வருகிறது.
அன்னிய செலாவணிக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகின்றன. இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்திய மக்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்வது காலங்காலமாக நீடித்து வருகிறது. உடனடியாக பணமாக மாற்றும் திறன் உள்ளதால் மக்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்யவே விரும்புகின்றனர்.
அதை மாற்ற பல்வேறு கவர்ச்சிகரமான முதலீட்டுத் திட்டங்களைக் கொண்டு வர வேண்டும் என்றார் அவர். இந்த நிகழ்ச்சியில் மாநிலத் திட்டக் குழுத் துணைத் தலைவர் சாந்தா ஷீலா நாயர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.