முகப்பு
தமிழ்நாடு

பாபநாசம் அணையில் படகு சவாரி, அருவிகளில் குளியல்

திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவிகளில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை குளித்து மகிழ்ந்தனர். பாபநாசம் அணையில் படகு சவாரி செய்து ரசித்தனர்.

Updated On : 2 செப்டம்பர், 2013 at 7:41 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:17 PM

திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவிகளில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை குளித்து மகிழ்ந்தனர். பாபநாசம் அணையில் படகு சவாரி செய்து ரசித்தனர்.

பாபநாசம் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவிகளில் ஆண்டு முழுவதும் தண்ணீர் விழுவதால் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாபநாசம் அணையில் ஓராண்டுக்குப் பிறகு இம் மாதம் 2-ஆம் தேதி படகுப் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. இதனால், அணையில் படகு சவாரி செய்ய சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகின்றனர்.

தொடர்ச்சியாக வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் தமிழகத்தில் பல்வேறு பகுதியில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அருவி, அணைக்கு சுற்றுலா வந்தனர்.

Advertisement

பாபநாசம் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவியில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பாபநாசம் அணையில் நீண்ட வரிசையில் காத்திருந்து படகு சவாரி செய்தனர். அகஸ்தியர் அருவிக்கு ஏராளமான வாகனங்கள் வந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

போக்குவரத்து வசதியில்லை: உச்ச நீதிமன்றம் தடை விதித்ததையடுத்து புலிகள் காப்பகத்தில் உள்ள அருவிகள் மற்றும் சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டன. இதையடுத்து பாபநாசம் அகஸ்தியர் அருவிக்கு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் இயக்கப்பட்ட நகரப் பேருந்துகள் நிறுத்தப்பட்டன.

2012-ஆம் ஆண்டு டிசம்பர் 7-ஆம் தேதியில் இருந்து அருவிகளுக்கு சுற்றுலா செல்ல அனுமதிக்கப்பட்ட போதிலும், பாபநாசம் அகஸ்தியர் அருவிக்கு பஸ்களை இயக்க வனத் துறை அனுமதி வழங்கவில்லை.

அரசுப் போக்குவரத்துக் கழகம், நகரப் பேருந்துகளை இயக்க தயார் நிலையில் உள்ளது. ஆனால், வனத் துறை அனுமதி கிடைக்காததால் பஸ்களை இயக்க முடியவில்லை என போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

"நபருக்கு ரூ. 15 கட்டணம்' வெளியூரில் இருந்து பஸ்ஸில் பாபநாசம் வரும் சுற்றுலாப் பயணிகள், பாபநாசத்திலிருந்து அகஸ்தியர் அருவிக்கு தனியார் வேன், ஆட்டோ போன்ற வாகனங்களில்தான் செல்ல வேண்டும். பாபநாசத்தில் இருந்து 4 கி.மீ. தொலைவில் இருக்கும் அகஸ்தியர் அருவிக்குச் செல்ல ஒரு நபருக்கு ரூ. 15 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இது அரசு பஸ் கட்டணத்தைவிட இரு மடங்கு அதிகம் என்பதால் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

மேலும், ஆட்டோக்களில் அதிக எண்ணிக்கையில் பயணிகளை ஏற்றிச் செல்வதாகப் புகார் எழுந்துள்ளது. ஆகவே, சுற்றுலாப் பயணிகளின் நலனை கருத்தில்கொண்டு அரசு பஸ்களை இயக்க வனத் துறை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.