முகப்பு
தமிழ்நாடு

கச்சத்தீவு: மத்திய அரசுக்கு கருணாநிதி கண்டனம்

கச்சத்தீவு இலங்கைக்குச் சொந்தம் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியுள்ளதற்கு திமுக தலைவர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Updated On : 2 செப்டம்பர், 2013 at 7:44 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:19 PM

கச்சத்தீவு இலங்கைக்குச் சொந்தம் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியுள்ளதற்கு திமுக தலைவர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: கச்சத்தீவு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ள கருத்துகள் தமிழக மக்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கச்சத்தீவு பன்னெடுங் காலமாக ராமநாதபுரம் ராஜாவின் ஆளுகையில்தான் இருந்தது.

Advertisement

இலங்கையை ஆட்சி செய்த டச்சு கம்பெனி அந்தத் தீவை 1660-இல் குத்தகைக்குப் பெற்றிருந்தது.

பின்னர் 1870-73, 1875, 1880, 1889 ஆகிய ஆண்டுகளில் ராமநாதபுரம் அரசர் இந்தத் தீவுக்கு அருகில் உள்ள சங்குப் படுகையைக் குத்தகைக்கு விட்டிருந்தார் என்பதும், இலங்கை ஆளுநரின் 1757-1962 நினைவு ஏடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1766-இல் கண்டி அரசரால் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தமும், 1845-ம் ஆண்டில் இலங்கை லெப்டினன்ட் கவர்னர் எழுதிய கடிதமும், இத்தீவு ராமநாதபுரம் அரசரின் ஆளுகையிலும், கட்டுப்பாட்டிலும் இருந்தது என்பதற்கான ஆதாரங்களாகும்.

கச்சத்தீவை, வணிகர்களான ஜனாப் முகமது காதர் மரக்காயருக்கும், முத்துசாமி பிள்ளைக்கும் அரசர் சேதுபதி ஐந்தாண்டுகளுக்குக் குத்தகைக்கு வழங்கியிருந்தார்.

இதற்கான ஆவணம், ராமநாதபுரம், துணை பதிவாளர் அலுவலக ஆவண எண். 510/570, தேதி 2.7.1980 ஆகும். 1947-இல் ஜமீன் ஒழிப்புச் சட்டத்தின் மூலம் இந்தியாவுக்குச் சொந்தமானது.

இந்தியா விடுதலை பெற்ற பின் இத்தீவு தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தில் 1250 சர்வே எண்ணில் கட்டுப்பட்டிருந்தது.

தமிழ்நாடு அரசு வெளியிட்ட ராமநாதபுரம் மாவட்ட ஆவணத் தொகுப்பேட்டிலும் (கெஜட்டிலும்) இவ்விவரம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலே குறிப்பிட்டுள்ள வரலாற்றுப் பூர்வமான ஆதாரங்களையும், மேலும் தமிழக அரசிடம் இருக்கும் கூடுதல் ஆவணங்களையும் இணைத்து உச்ச நீதிமன்றத்தில் உரிய முறையில் தமிழக அரசு மனு தாக்கல் செய்வது மிக அவசியமாகும்.

1974-ஆம் ஆண்டு இந்திய அரசு இலங்கை அரசுடன் ஒப்பந்தம் செய்துகொண்ட காலகட்டத்திலேயே, மத்திய அரசு அந்த ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று, 1974 ஆகஸ்ட் 21-ஊல் திமுக ஆட்சியில், சட்டப் பேரவையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1974-ஆம் ஆண்டு இந்தியா இலங்கையுடன் ஒப்பந்தம் செய்து கொண்டபோது நாடாளுமன்றத்தில் அதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இவற்றையெல்லாம் முற்றிலும் மறைத்துவிட்டு, மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தற்போது தாக்கல் செய்துள்ள பிரமாணத்தில் உண்மைக்கு மாறான தகவல்களைத் தெரிவித்திருப்பது தமிழகத்துக்குப் பேரிடர் போன்றது.

இந்தப் பிரச்னையில் பெரும் பின்னடைவை ஏற்படுத்திடக்கூடியது.

மத்திய அரசின் முடிவு கடும் கண்டனத்துக்குரியதாகும்.

எனினும், கச்சத்தீவுப் பிரச்னையில் தமிழகத்தின் பக்கம் நீதியும் நேர்மையும் நிரம்ப இருப்பதால், நமது உரிமை உச்ச நீதிமன்றத்தில் நிலைநாட்டப்படும் என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.