முகப்பு
தமிழ்நாடு

சேது சமுத்திரத் திட்ட வழக்கில் விரைவில் பிரமாண பத்திரம்

சேது சமுத்திரத் திட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கில், தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவுக்கு பதில் அளிக்கும் வகையில் விரைவில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யும் என்றார் மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே. வாசன்.

Updated On : 2 செப்டம்பர், 2013 at 2:57 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:19 PM

சேது சமுத்திரத் திட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கில், தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவுக்கு பதில் அளிக்கும் வகையில் விரைவில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யும் என்றார் மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே. வாசன்.

தஞ்சாவூரில் அவர் அளித்த பேட்டி: நிகழாண்டு பிப்ரவரி மாதம் சேது சமுத்திரத் திட்டம் தொடங்கும் வகையில், மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. இந்தத் திட்டத்துக்கு இடையூறாக பல்வேறு சந்தேகங்களை எழுப்பி, தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

இந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் மூன்று வாரங்களில் வரவுள்ளது. அதற்கு முன்பு தமிழக அரசு கூறியுள்ள தவறான காரணங்களுக்குப் பதில் அளிக்கும் வகையில், மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யும்.

Advertisement

சேது சமுத்திரத் திட்டம் தென் மாவட்ட மக்களின் கனவு திட்டம். தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு மட்டுமல்ல, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும் மிக முக்கியமான திட்டம். இந்தத் திட்டத்தை உறுதியோடு செயல்படுத்த வேண்டும் என மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சர்வதேச அளவில் வளர்ந்த நாடுகள் கூட பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், நம் நாட்டைப் பொருத்தவரை, இத்தகைய பொருளாதார வீழ்ச்சியில் இருந்து வெளிவருவது என்பது கடினமானது. இதனால், இந்தத் தாக்கம் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியில் தெரிகிறது. என்றாலும், கடுமையான பொருளாதார சீர்திருத்தம் காரணமாக விரைவில் இந்தத் தாக்கம் குறையும். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக கட்டாயமான சூழ்நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஆட்சியில் பெட்ரோல், டீசல் விலை 12 முறை குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பா.ஜ.க.வினர் மக்களைக் குழப்பிக் கொண்டிருக்கின்றனர்.

மீண்டும் இந்தியாவின் நிலையை உறுதி செய்து, 2014 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமையும் என்றார் வாசன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.