பதவியில் இருந்ததுதான் மன்மோகன் சிங்கின் சாதனை: சுப்பிரமணியன் சுவாமி
பதவியில் இருந்ததுதான் பிரதமர் மன்மோகன் சிங்கின் சாதனை என்று பா.ஜ.க.வின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறினார்.
பதவியில் இருந்ததுதான் பிரதமர் மன்மோகன் சிங்கின் சாதனை என்று பா.ஜ.க.வின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறினார்.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் எம்.ஆர். வெங்கடேஷ் எழுதிய "டாக்டர் மன்மோகன் சிங் - பத்தாண்டு சீரழிவு' என்ற ஆங்கில புத்தகம் வெளியிடப்பட்டது.
இந்தப் புத்தகத்தை வெளியிட்டு சுப்பிரமணியன் சுவாமி பேசியது:
Advertisement
மன்மோகன்சிங் இந்த நாட்டுக்குச் செய்த மிகப்பெரிய சேவையாக நான் கருதுவது அவர் தொடர்ந்து 10 ஆண்டுகள் பதவியில் நீடித்ததுதான். வேறொருவர் அந்தப் பதவியில் வராமல் செய்ததன் மூலம் அவர் நாட்டை மிகப்பெரிய சீரழிவிலிருந்து காப்பாற்றியுள்ளார்.
வரும் தேர்தலில் பா.ஜ.க. பெரும்பான்மை பலத்துடன் மத்தியில் ஆட்சி அமைக்கும் என உறுதியாக நம்புகிறேன். அந்த நம்பிக்கையால்நான் பா.ஜ.க.வில் இணையவில்லை.
ஜனசங்கம் அமைப்பில் ஏற்கெனவே இருந்துள்ளதால், இப்போது பா.ஜ.க.வில் இணைந்துள்ளேன்.
பா.ஜ.க.வின் தொலைநோக்குத் திட்டத்தைத் தயாரிக்கும் குழு அந்தத் திட்டம் குறித்து எனது கருத்துகளைக் கேட்டது. அந்த தொலைநோக்குத் திட்டத்தில் உள்ள அல்லது சேர்க்கப்பட உள்ள அம்சங்கள் குறித்து எனது கருத்துகளை நான் பகிர்ந்துகொள்கிறேன்.
புதிய அரசின் கொள்கைகளில் முதன்மையானதாக பொருளாதாரச் சீர்திருத்தங்கள் ஏழைகளையும் சென்றடையும் வகையில் இருக்கும். முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ், ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு போன்றோர் மேற்கொண்ட பொருளாதார சீர்திருத்தங்களில் தொழில் நிறுவனங்களும், பணக்காரர்களும் உடனடியாக பயனடைந்தனர். ஏழை மக்களை அந்தச் சீர்திருத்தங்கள் உடனடியாகச் சென்று சேராததால், அடுத்து வந்த தேர்தல்களில் அவர்களால் வெற்றியைப் பெற முடியவில்லை.
இந்திய மக்கள்தொகை இந்தியாவுக்கு மிகப்பெரிய பலமாக உள்ளது. 70 சதவீதத்துக்கும் அதிகமான இந்தியர்கள் 35 வயதுக்கு உள்பட்டவர்கள். இவர்கள் அனைவருக்கும் உரிய கல்வியை வழங்கினால் அவர்கள் இந்தியப் பொருளாதாரத்தை மிகப்பெரிய அளவில் முன்னெடுத்துச் செல்வார்கள்.
பெட்ரோல் விலை உயர்வைச் சமாளிக்க "ஹைட்ரஜன் ஃப்யூல் செல்' ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும். "ஹைட்ரஜன் ஃப்யூல் செல்' மூலம் அனைத்து வாகனங்களையும் இயங்க வைக்கும் வகையில் தொழில்நுட்பம் வளரும். அப்போது விலை உயர்வைப் பற்றிய கவலை இருக்காது.
அதேபோல், உலகத்தில் உள்ள தோரியத்தின் அளவில் இந்தியாவில் மட்டும் 60 சதவீதம் தோரியம் உள்ளது. அணுசக்தி எரிபொருளான யூரேனியம் 2050-க்குள் தீர்ந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய, அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்துக்குப் பிறகு இந்தியாவில் தோரியம் தொடர்பான ஆராய்ச்சிகளுக்கு எந்தவித நிதியுதவியும் வழங்கப்படுவதில்லை.
தோரியம் தொடர்பான ஆராய்ச்சிகளில் புதிய அரசு பிரதான கவனம் செலுத்தும். அணு உலைகளில் தோரியத்தைப் பயன்படுத்தத் தொடங்கினால், இந்தியாவில் மின் தட்டுப்பாட்டுப் பிரச்னையே இருக்காது.
அதேபோல், உலகத்தில் உள்ள பெரிய நாடுகளில் இல்லாத வகையில் இந்தியாவில் மட்டும்தான் ஆண்டின் 12 மாதங்களும் விவசாயம் செய்ய முடியும். ஆனால், மொத்த விவசாயிகளில் 25 சதவீதம் பேர்தான் ஒரு போகத்துக்கும் கூடுதலாக விவசாயம் செய்கின்றனர்.
விவசாயத்தில் மேலும் அறிவியல் முறைகளைப் புகுத்தி மூன்று போகங்கள் விளைவித்தால் அனைத்து நாடுகளையும் நாம் மிஞ்சலாம், என்றார் அவர்.
பத்திரிகையாளர் எஸ். குருமூர்த்தி: கடந்த 20 ஆண்டுகளில் 2 பெரிய தலைவர்கள் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை தங்களுக்கான பாதையில் மேற்கொண்டனர். முன்னாள் பிரதமர்கள் பி.வி. நரசிம்ம ராவ் மற்றும் வாஜ்பாய்தான் அந்த இருவர்.
முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் அதிகம் பேசவில்லை. ஆனால், பிறர் மூலமாக தான் நினைத்த முக்கியச் சீர்திருத்தங்களை மேற்கொண்டார். நல்ல தலைவருக்கு அதுதான் அடையாளம். அதேபோல், மற்றொரு முன்னாள் பிரதமர் வாஜ்பாய். 18 கட்சிகளை ஒன்றிணைத்து பொருளாதாரப் பாதையில் இந்தியாவை மிகச்சிறப்பான நிலைக்கு உயர்த்தினார்.
இந்தியா உலக வல்லரசாக முடியும் என்ற நம்பிக்கையை நம்நாட்டு மக்களுக்கு அவர்தான் ஏற்படுத்தினார்.
தேர்தலில் மீண்டும் வெற்றி பெறும் நோக்கத்தோடு வருபவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும். தேசத்துக்காக தங்கள் நலனைத் தியாகம் செய்யும் உறுதியான தலைவர்களை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும் என்றார்.
ஊழலுக்கு எதிரான இளைஞர் இயக்கத்தின் மாநில இணை அமைப்பாளர் எம்.ராமமூர்த்தி, சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் மாநில அமைப்புச் செயலாளர் நம்பி நாராயணன், தனியார் நிறுவன அதிகாரி காஞ்சன் குப்தா உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.