பழங்காலத் தாழிகள், உறைகிணறு கண்டுபிடிப்பு
விருத்தாசலத்தை அடுத்த தர்மநல்லூர் கிராமத்தில் பழங்கால தாழி மற்றும் உறை கிணறு உள்ளிட்டவற்றை வரலாற்றுத் துறை மாணவர்கள் சனிக்கிழமை கண்டுபிடித்தனர்.
விருத்தாசலத்தை அடுத்த தர்மநல்லூர் கிராமத்தில் பழங்கால தாழி மற்றும் உறை கிணறு உள்ளிட்டவற்றை வரலாற்றுத் துறை மாணவர்கள் சனிக்கிழமை கண்டுபிடித்தனர்.
தர்மநல்லூர் கிராமத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் தொல்லியல் ஆய்வில் ஈடுபட்டனர்.
அப்போது, சுடுமண்ணால் ஆன உறை கிணறு இருப்பதை கண்டறிந்தனர். மேலும், அதன் அருகில் தோண்டியபோது, முதுமக்கள் தாழி, சுடுமண் பொம்மை, இரும்பாலான வாள் மற்றும் சில்லு கருவிகள் கிடைத்துள்ளன.
Advertisement
இது குறித்து, அண்ணாமலைப் பல்கலைக் கழக வரலாற்றுத் துறைப் பேராசிரியர்கள் சிவராமகிருஷ்ணன், கலைச்செல்வன் ஆகியோர் தெரிவித்தது:
ஆய்வில் ஈடுபட்டபோது 4 முதுமக்கள் தாழி மற்றும் 12 அடிநீளமுள்ள இரும்பாலான வாள், 77 செ.மீ உயரமும், 18 செ.மீ அகலமும், 235 செ.மீ சுற்றளவும் கொண்ட சுடு மண்ணாலான உறைகிணறு ஆகியவை கிடைத்துள்ளன.
ஆய்வு பொருள்களில் கிடைத்துள்ள பெருங்கற்கால குறியீடுகளை பார்க்கிறபோது இவை 2200 ஆண்டுகால பழமை வாய்ந்ததாக இருக்கலாம் எனத் தெரிகிறது.
முதுமக்கள் பயன்படுத்திய பொருள்கள் இதுவரை திருச்சி உறையூர், கோவை கொடுமணல், பழனி பொருந்தல் ஆகிய ஊர்களில் மட்டுமே கிடைத்துள்ளன.
கடலூர் மாவட்டத்தில் இப்போதுதான் முதல்முறையாக முதுமக்கள் பயன்படுத்திய பொருள்கள் கண்டறியப்பட்டுள்ளன எனத் தெரிவித்தனர். மேலும், ஆய்வின்போது கண்டறியப்பட்ட பொருள்களை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கு ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர்.