முகப்பு
தமிழ்நாடு

பொருளாதார நெருக்கடி: பிரதமர் பதவி விலக வெங்கய்யா நாயுடு வலியுறுத்தல்

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தார்மிக பொறுப்பேற்று பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும் என பாஜக மூத்த தலைவர் எம்.வெங்கய்யா நாயுடு வலியுறுத்தினார்.

Updated On : 2 செப்டம்பர் 2013, 2:58 am IST
பகிர்:

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தார்மிக பொறுப்பேற்று பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும் என பாஜக மூத்த தலைவர் எம்.வெங்கய்யா நாயுடு வலியுறுத்தினார்.

சென்னையில் பா.ஜ.க.வின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவர் கூறியதாவது: நாட்டின் தற்போதைய பொருளாதார வளர்ச்சி 4.4 சதவீதம் என்பது நான்கு ஆண்டுகளைவிட பின்தங்கிய நிலையாகும்.

டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இந்த ஆண்டு மட்டும் 16 சதவீதம் சரிவடைந்துள்ளது.

Advertisement

Advertisement

நாட்டில் நிலவும் பொருளாதார வீழ்ச்சிக்கும், இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைந்ததற்கும் தார்மிக பொறுப்பேற்று பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும்.

பொருளாதார வீழ்ச்சிக்கும், ரூபாய் மதிப்பு சரிவுக்கும் பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அளித்த விளக்கம் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை. ரூபாய் மதிப்பு சரிவுக்கு எதிர்க்கட்சிகள், மாநில அரசு, இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் சர்வதேச காரணிகளே காரணம் என மத்திய அரசு கூறுகிறது.

மத்திய அரசு அன்னிய முதலீட்டாளர்களை வரவேற்கிறது. ஆனால், இந்திய முதலீட்டாளர்கள் நாட்டின் பொருளாதார வீழ்ச்சியைக் கண்டு, இங்கிருந்து வெளியே ஓடிக்கொண்டிருக்கின்றனர். மத்திய அரசு முழுவதுமாக தோல்வியடைந்து விட்டது என்பதை மறந்து, நீங்களும் உங்களது நிதி அமைச்சரும் மற்ற அனைவரையும் குறை கூறுகிறீர்கள்.

மேலும், உற்பத்திக்கு உயிரூட்டுவது, ஏற்றுமதியை ஊக்குவிப்பது, பொதுத் துறை நிறுவனங்களில் மூலதனச் செலவை அதிகரிப்பது, சுற்றுச்சூழல் அனுமதி உள்பட அனைத்து நிர்வாகத்திலும் மத்திய அரசு தோல்வி அடைந்துள்ளது. நீங்கள் உங்களது பணியைச் செய்யாமல், எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்கவில்லை என எங்களை குற்றம் சாட்டுகிறீர்கள்.

தமிழகத்தில் உணவுப் பாதுகாப்புக்கு மாநில அரசு ஏற்கெனவே வழிவகுத்துள்ளது. தற்போது மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்தின் மூலம் தமிழகத்துக்கு கடுமையான பாதிப்புதான் ஏற்படும்.

இதனால், தமிழக அரசுக்கு கூடுதல் சுமை ஏற்படும். உணவுப் பாதுகாப்பு மசோதா குறித்து நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை பேச உள்ளேன். பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி இருப்பது பொது மக்களுக்கு கூடுதல் சுமை. இந்த விலை உயர்வைத் தொடர்ந்து அத்தியாவசியப் பொருள்களின் விலையும் உயரும் என்றார் அவர். தமிழக பா.ஜ.க. மூத்தத் தலைவர் இல.கணேசன், தேசிய பொதுச் செயலர் டாக்டர் தமிழிசை செüந்தரராஜன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.