முகப்பு
தமிழ்நாடு

14 கி.மீ. தொலைவுக்கு சேதமடைந்த நெடுஞ்சாலை!

காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் ஊரப்பாக்கம் - நல்லாம்பாக்கம் நெடுஞ்சாலை, 14 கி.மீ. தொலைவுக்கு மோசமாக சேதமடைந்த நிலையில் உள்ளது.

Updated On : 2 செப்டம்பர் 2013, 3:39 am IST
பகிர்:

காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் ஊரப்பாக்கம் - நல்லாம்பாக்கம் நெடுஞ்சாலை, 14 கி.மீ. தொலைவுக்கு மோசமாக சேதமடைந்த நிலையில் உள்ளது.

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஊரப்பாக்கம் ஜிஎஸ்டி சாலையில் தொடங்கி காரணைப்புதுச்சேரி, காட்டூர் அருங்கால், கீரப்பாக்கம், நல்லாம்பாக்கம் கூட்ரோடு வரை உள்ள வண்டலூர் - கேளம்பாக்கம் சாலையில் இணைகிறது.

இச்சாலை பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாகவும் சேறும் சகதியுமாகவும் உள்ளது. சில இடங்களில் அபாய பள்ளங்களும் உள்ளன.

Advertisement

Advertisement

கீரப்பாக்கம், நல்லாம்பாக்கம் மற்றும் ஊனமாஞ்சேரி ஆகிய இடங்களில் இயங்கும் கல்குவாரிக்குச் சொந்தமான டிப்பர் லாரிகள் சென்று வருவதே சாலை சேதமடையக் காரணம் என அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கூறுகின்றனர்.

இச்சாலையில் இயங்கி வந்த 5-க்கும் மேற்பட்ட பஸ்களின் போக்குவரத்து சேவை சாலை சீர்கேட்டின் காரணமாக நிறுத்தப்பட்டுவிட்டது.

இதனால் கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், தாம்பரம் மற்றும் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் சென்று படித்து வரும் மாணவ, மாணவிகள் அன்றாடம் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இவர்கள் மட்டும் அல்லாமல் கர்ப்பிணிகள், முதியவர்கள், உடல் ஊனமுற்றவர்களும், பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சாலையை சீரமைக்கக் கோரி தமிழக அரசுக்கும், சம்மந்தப்பட்ட துறையினருக்கும், மேலதிகாரிகள் ஆகிய பலதரப்பினருக்கும் புகார் மனுக்கள் கொடுத்தும் பல போராட்டங்கள் நடத்தியும் சாலை சீரமைக்கப்பட்டபாடில்லை.

இதற்கிடையில் அப்பகுதியில் சாலை அமைப்பதில் வனத்துறை குறுக்கீடும் உள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.

தற்போது காரணைப் புதுச்சேரி, கீரப்பாக்கம், நல்லாம்பாக்கம், குமிழி ஆகிய ஊராட்சிகளில் வசிக்கும் மக்களும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் சாலை சீரமைக்கப்படாத பட்சத்தில் வரும் நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிக்க இருப்பதாகவும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இதே கோரிக்கையை நிறைவேற்றக் கோரி காஞ்சிபுரம் மாவட்டம், கீரப்பாக்கம் ஊராட்சியைச் சேர்ந்த கிராமங்கள் முன்னேற்றக் கழக நிறுவனர் மற்றும் தலைவர் ஏ.தனசேகரன் பொதுநலன் கருதி துண்டுப் பிரசுரமும் வெளியிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.