முகப்பு
தமிழ்நாடு

வெற்றி பெறும் அணியுடன் கூட்டணி: விஜயகாந்த்

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறும் அணியுடன் கூட்டணி அமைப்பது என தேமுதிகவின் தலைமை செயற்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 2 செப்டம்பர் 2013, 7:44 am IST
பகிர்:

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறும் அணியுடன் கூட்டணி அமைப்பது என தேமுதிகவின் தலைமை செயற்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம் என்பது தொடர்பாக இறுதி முடிவு எடுக்க கட்சித் தலைவர் விஜயகாந்துக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.

தேமுதிகவின் தலைமைச் செயற்குழு கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இக்கூட்டத்தில் மக்களவைத் தேர்தலில் எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம் என்பது தொடர்பாக மாவட்டச் செயலாளர்கள், அணிச் செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்களிடம் விஜயகாந்த் கருத்து கேட்டார்.

Advertisement

Advertisement

பேரவைத் தேர்தலில் தேமுதிகவின் தயவால்தான் அதிமுக வெற்றிபெற்றது. திமுகவைத் தேமுதிக ஆதரித்திருந்தால் கருணாநிதிதான் தற்போது முதல்வராக இருந்திருப்பார்.

இதை நினைத்துப் பார்க்காமல் தற்போது தேமுதிகவைப் பழிவாங்கும் நோக்குடன் அதிமுக செயல்படுகிறது. அதனால் மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்குப் பாடம் புகட்டும் வகையில் கூட்டணி அமைக்க வேண்டும் என்று பெரும்பான்மையோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

பல்வேறு ஊழல் புகார்களால் காங்கிரஸýக்கு கெட்ட பெயர் உள்ளது. மேலும் தமிழகப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு காங்கிரஸ் எந்த உதவியும் செய்யவில்லை. அதனால் காங்கிரஸூடன் கூட்டணி அமைக்கக் கூடாது என்று சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

அதிமுகவை எதிர்ப்பதற்கு திமுகவுடன் கூட்டணி அமைப்பதுதான் சரியாக இருக்கும். ஆனால் திமுகவுடன் முன் ஜாக்கிரதையோடு கூட்டணி அமைக்க வேண்டும். 2016-ல் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற தேமுதிகவின் கனவையும் நினைத்துப் பார்க்க வேண்டும் என்று ஒருசாரார் கருத்து தெரிவித்துள்ளனர்.

இக்கூட்டத்துக்குப் பின் விஜயகாந்த் பேசியதன் அம்சம்:-

தேர்தல் கூட்டணி தொடர்பாக முடிவு எடுக்கக் கூடிய அதிகாரம் கொடுத்துள்ளதற்கு நன்றி. ஆனால் அதற்காக தனிப்பட்ட முறையில் எந்த முடிவையும் எடுத்துவிட மாட்டேன். தேர்தலுக்கு இன்னும் கால அவகாசம் உள்ளது. அதற்குள் பல அரசியல் மாற்றங்கள் நிகழலாம்.

எனினும் தேர்தல் கூட்டணி குறித்து வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள கட்சியின் மாநாட்டின் போது கட்சி நிர்வாகிகளிடம் மீண்டும் ஆலோசிப்பதுடன், மக்கள் கருத்தையும் கேட்டு கூட்டணி அறிவிப்பை வெளியிட திட்டமிட்டுள்ளேன். வெற்றி பெறும் அணியுடன் கூட்டணி அமைப்போம். நாம் இடம்பெறும் அணியே வெற்றிபெறும் என்று விஜயகாந்த் பேசினார்.

பண்ருட்டி ராமச்சந்திரன் கோபம்: செயற்குழு கூட்டம் காலை 11.30 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 3.30 மணிவரை நடைபெற்றது. ஆனால் அவைத் தலைவரான பண்ருட்டி ராமச்சந்திரன் பிற்பகல் 2.30 மணியளவில் கூட்டத்துக்கு வந்தார். இதனால் கூட்டத்தை அவர் புறக்கணித்து விட்டதாகக் கூறப்பட்டது.

உண்மையில் செயற்குழு கூட்டம் தொடர்பான அழைப்பிதழில் பண்ருட்டி ராமச்சந்திரன் பெயர் விடுபட்டுள்ளது. இதனால் செயற்குழுவில் கலந்து கொள்ளாமல் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் இல்லத் திருமணத்தில் பங்கேற்கச் சென்றுவிட்டாராம்.

அதன்பின், விஜயகாந்த் சமாதானம் செய்து அழைத்தப் பிறகே செயற்குழு கூட்டத்தில் அவர் பங்கேற்றுள்ளார்.

தேமுதிகவில் மொத்தம் 59 மாவட்டச் செயலர்கள் உள்ளனர். இவர்கள் தலா ரூ.50 லட்சம் தேர்தல் நிதி திரட்டித் தர வேண்டும் என்று கூட்டத்தில் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது..

மத்திய அரசுக்குக் கண்டனம்: விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த எந்தவித நடவடிக்கையும் எடுக்காத மத்திய அரசுக்குக் கண்டனம். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை மத்திய அரசு தடுக்க வேண்டும். கச்சத்தீவு இலங்கைக்குத்தான் சொந்தம் என்று மத்திய அரசு கூறியுள்ள கருத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று வலியுறுத்துவது உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments