நாட்டுத் துப்பாக்கி தயாரித்து விற்பனை: 2 பேர் பிடிபட்டனர்
வேலூர் மாவட்டம், ஆம்பூர் அருகே நாட்டுத் துப்பாக்கிகளைத் தயாரித்து விற்பனை செய்ததாக 2 பேர் வனத்துறையினரிடம் பிடிபட்டனர். பின்னர் இவர்கள் ஆம்பூர் தாலுகா போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
வேலூர் மாவட்டம், ஆம்பூர் அருகே நாட்டுத் துப்பாக்கிகளைத் தயாரித்து விற்பனை செய்ததாக 2 பேர் வனத்துறையினரிடம் பிடிபட்டனர். பின்னர் இவர்கள் ஆம்பூர் தாலுகா போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
தகவலின்பேரில் நாயக்கனேரி, பனங்காட்டேரி, காமனூர்தட்டு ஆகிய மலைக் கிராமங்களில் ஆம்பூர் வனச்சரக அலுவலர் கனகசபாபதி, வனவர் செந்தில் உள்ளிட்டோர் ஞாயிற்றுக்கிழமை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது காமனூர் தட்டு பெரியகிணறு பகுதியில் கிராமத்தில் செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் ஜமுனாமத்தூரைச் சேர்ந்த லட்சுமணன் (60) என்பவர் வாடகைக்கு குடிசை போட்டு அங்கு இரும்பு பட்டறை நடத்தி வந்ததும், அந்த பட்டறையில் நாட்டு துப்பாக்கிகளைத் தயாரித்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதையடுத்து, லட்சுமணனையும், அவருக்கு உடந்தையாக இருந்ததாக நாயக்கனேரி மலைக் கிராமத்தைச் சேர்ந்த குப்புசாமியையும் (45) பிடித்தனர்.
பின்னர் பட்டறையில் ஒரு நாட்டு துப்பாக்கி, துப்பாக்கி தயாரிக்க தேவையான இரும்பு பைப்புகள், மரக்கட்டைகள் உள்ளிட்ட தளவாட பொருள்களை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதன்பின்னர் இருவரையும், பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களையும் ஆம்பூர் தாலுகா காவல் நிலையத்தில் வனத்துறையினர் ஒப்படைத்தனர். இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து, துப்பாக்கி தயாரிக்கப்பட்ட இரும்பு பட்டறையை ஆம்பூர் சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் ஜெயக்குமார், கிராம நிர்வாக அலுவலர்கள் கார்மேகம், ராஜேந்திரபிரசாத் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.